சீன ராக்கெட் கட்டுப்பாடிழந்தது - பூமியில் விழப்போவதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி

SOCIAL SHARE
Pin It

லாங் மார்ச் -5 பி ராக்கெட் (Long March-5B rocket) ஏப்ரல் 29 ஆம் தேதி சீனாவின் புதிய விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை பூமியின் சுற்றுப்பாதையில் ஏவியது. அதன் 18 டன் எடை கொண்ட முக்கிய பிரிவு இப்போது விழும் நிலையில் உள்ளது. அது பூமியில் எங்கே, எப்போது நுழையும் என்று துல்லியமாக சொல்வது கடினம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 

பென்டகனின் கூற்றுப்படி, சனிக்கிழமையன்று சுமார் 2300 GMT மணியளவில் சீனாவின் ராக்கெட் பகுதி வரலாம். கணிக்கப்பட்ட இந்த நேரத்தில் இருந்து ஒன்பது மணிநேரம் கூடுதலாகவோ அல்லது குறைவான சமயத்திலோ பூமியின் எந்தப் பகுதியிலும் சீனாவின் ராக்கெட் வந்து விழலாம். 

மறு நுழைவில் பெரும்பாலான ராக்கெட் கூறுகள் அழிக்கப்படலாம் என்று சீன அதிகாரிகள் நம்புகின்றனர்.

"தீங்கு விளைவிக்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ராக்கெட் - அல்லது அதன் சில பகுதிகள் - தரையிறங்கும் இடத்தைப் பற்றி ஊகங்கள் எழுந்துள்ள போதிலும், 70 சதவிகித நீரால் ஆன பூமி கிரகத்தில் கடலில் விழுவதற்கான வாய்ப்பே அதிகம் என்று கூறப்படுகிறது.  

"இது யாருக்கும் தீங்கு விளைவிக்காத இடத்தில் தரையிறங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் மைக் ஹோவர்ட் கூறினார்.

ராக்கெட் பிரிவை அமெரிக்கா கண்காணித்து வருவதாக ஹோவர்ட் கூறினார், ஆனால் "பூமியின் வளிமண்டலத்தில் அது எப்போது நுழையும் என்பதை சரியாக கணிக்க முடியாது என்று ஹோவர்ட் கருதுகிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் அதை சுட்டு வீழ்த்துவதற்கான எந்த திட்டமும் , அமெரிக்க ராணுவத்திடம் இல்லை என்று கூறினார். ராக்கெட் பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும் விஷயத்தில் சீனா அலட்சியமாக இருப்பதாகவும் கூறினார்.

"பொருளின் அளவைப் பொறுத்தவரை, பெரிய துண்டுகள் எஞ்சியிருக்கும்" என்று பாரிஸ்-பிஎஸ்எல் ஆய்வகத்தின் வானியலாளர் (astronomer) புளோரண்ட் டெலிஃபி (Paris-PSL Observatory) கூறினார்.

"மக்கள் வசிக்கும் பகுதியில் சிதைவுகள் விழுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. அநேகமாக அந்த சாத்தியக்கூறு ஒரு மில்லியனுக்கு ஒன்று என்ற விகிதத்தில் தான் இருக்கும்."

2020 ஆம் ஆண்டில், மற்றொரு லாங் மார்ச் ராக்கெட்டிலிருந்து சிதைபாடுகள் ஐவரி கோஸ்டில் உள்ள கிராமங்களில் விழுந்தன, இதனால் கட்டமைப்பு சேதம் ஏற்பட்டது, ஆனால் மக்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

ARUNACHALAM