குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என பெற்றோர்கள் பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது சில நாடுகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ரஷ்யாவில் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாசி வழியாக தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பரிசோதனையில் இதுவரை உடல் வெப்பநிலை அதிகரிப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்தவித பக்கவிளைவுகளும் குழந்தைகளுக்கு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ரஷ்ய விஞ்ஞானி கமலேயா இன்ஸ்டிடியூட்டின் தலைவரான அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் அவர்கள் குழந்தைகளுக்கு நாசியில் தடுப்பூசி போட்டதில் இதுவரை எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே, உலகம் முழுவதிலும் இருந்து கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டவர்களை வரவேற்கும் விதமாக தன் நாட்டின் எல்லைகளை திறந்துள்ளது ஸ்பெயின் அரசு. இதுபற்றி கூறியுள்ள அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கரோலினா டாரியாஸ், சுற்றுலாவில் உலகளாவிய தலைமையை மீட்டெடுக்கும் பணியில் தங்கள் நாடு ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது ஸ்பெயின் ஒரு பாதுகாப்பான இடமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல ஸ்பெயினுக்குள் நுழையும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் பி.சி.ஆர் பரிசோதனையுடன் தடுப்பூசி போடாத ஐரோப்பியர்கள் இனி அதற்கு பதிலாக மலிவான ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொள்ள முடியும்.













