Editor's Choice
தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது.
 
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த பேராலயம் மடோனா ஆப் வேளாங்கன்னிக்கு அர்ப்பனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பேராலயத்தில் குடிகொண்டிருக்கும் அன்னை மரியா, ஆரோக்கிய அன்னை என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். புதுமைகள் அரங்கேறும் வேளாங்கன்னி வேளாங்கன்னி திருத்தலம் ஏராளமான புதுமைகள் அரங்கேறும் புண்ணிய தலமாக நம்பப்படுகிறது.
 
அதாவது கிபி 1560ல் அன்னை கன்னி மரியா இந்த வேளாங்கன்னியில் காட்சி கொடுத்ததாகவும், அதிலிருந்து தினமும் இங்கு ஏராளமான புதுமைகள் நடந்து வருவதாகவும் மக்கள் நம்பி வருகின்றனர். ஆரோக்கிய அன்னையின் காட்சிகள் வேளாங்கன்னியில் அன்னை மரியா தனது குழந்தை இயேசுவோடு, ஒரு பால்காரர் முன் தோன்றி, தனது மகனின் பசியைப் போக்க அவரிடம் பால் கேட்டதாக, ஒரு பரவலான ஒரு நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. இந்த நிகழ்ச்சியை மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தனியாக ஒரு சிறிய ஆலயமும் இங்கு உள்ளது.
 
பொதுவாக வேளாங்கன்னி புதுமைகளின் பூமி என்று நம்பப்படுகிறது. அவற்றில் ஒன்றாக கீழ்வரும் நிகழ்ச்சியைக் குறிப்படலாம். கிபி 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த சில வியாரிகள் தங்கள் பாய்மர கப்பல் மூலம் இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒரு பெரிய புயலால் தாக்கப்பட்டனர். தங்களின் உயிர் போகப்போகும் நிலையில் தங்களைக் காக்க வேண்டும் என்று அன்னை மரியாவை வேண்டினர்.
 
மேலும் தாங்கள் உயிருடன் கரையிறங்கும் பகுதியில் அன்னை மரியாவுக்கு ஒரு ஆலயம் கட்டுவதாகவும் வாக்குறுதி கொடுத்தனர். அவர்களின் வேண்டுதல் கேட்கப்பட்டு, அவர்களின் உயிர் மற்றும் உடைமைகள் காப்பாற்றப்பட்டு, அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8 அன்று அவர்கள் வேளாங்கன்னி கடற்கரையில் பத்திரமாக கரையிறங்கினர். பின் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி அன்னை மரியாவுக்கு வேளாங்கன்னியில் ஒரு சிறிய ஆலயத்தைக் கட்டினர்.
 
தற்போது அந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு அழகாக காட்சி அளிக்கிறது. மேற்சொன்ன புதுமையைத் தவிர்த்து வேறு இரண்டு புதுமைகளையும் பக்தர்கள் பரவலாகப் பேசி வருகின்றனர். அதாவது ஒரு பால்காரச் சிறுவன் முன்பு அன்னை மரியா தோன்றி தனக்கு ஒரு செம்பு பால் தருமாறு கேட்டார். ஆனால் அந்த சிறுவன் தரவில்லை. மாறாக தனது வாடிக்கையாளருக்குக் கொடுத்தான். உடனே அந்த செம்பிலிருந்து பால் பொங்கி தொடர்ந்து நிரம்பி வழிந்து கொண்டிருந்து. அதைப் பார்த்த அந்த சிறுவனும் மற்றும் வாடிக்கையாளரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்து வாழ்வில் மாற்றம் கண்டு அன்னையின் பக்தர்கள் ஆனார்கள். அதுபோல் இன்னொரு முறை அன்னை மரியா மோர் விற்கும் ஒரு நடக்க முடியாத சிறுவன் முன் தோன்றி மோர் கேட்டார். அந்த சிறுவனும் அன்னை மரியாவுக்கு கொடுத்தான். உடனே அவன் கால் வலுபெற்று நடக்க ஆரம்பித்தான். இந்த புதுமையையும் பக்தர்கள் பெரிதாக பேசி வருகின்றனர். சுனாமியை வீழ்த்தி நம்பிக்கையை விதைக்கும்
 
வேளாங்கன்னி இவ்வளவு பெருமை வாய்ந்த வேளாங்கன்னிக்கு கருப்பு நாளாக அமைந்தது 2004, டிசம்பர் 26 ஆகும். அதாவது அன்றுதான் உலகையே உலுக்கிய சுனாமி, வேளாங்கன்னியையும் புரட்டிப் போட்டது. வேளாங்கன்னியில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிவிட்டு வீடு திரும்ப இருந்த பக்தர்கள் பலரின் உயிர்களையும் மற்றும் வேளாங்கன்னி மக்களையும் இந்த சுனாமி காவு வாங்கியது. அது மிகவும் சோகமான நிகழ்வு ஆகும்.
 
ஆனால் விரைவில் பலரது முயற்சி முற்றும் உழைப்பினால் மீட்பு பணிகள் மற்றும் மனிதாபிமான பணிகள் முடுக்கிவிடப்பட்டு, சுனாமி பாதிப்பிலிருந்து மிக வேகமாக வேளாங்கன்னி மீண்டு வந்தது. தற்போது சுனாமியின் சுவடுகளை பார்க்க முடியாத அளவிற்கு, புதிய மெருகுடன் வேளாங்கன்னி காட்சி தருகிறது. வேளாங்கன்னியில் பார்க்க வேண்டிய இடங்கள் வேளாங்கன்னியில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
 
குறிப்பாக வேளாங்கன்னி பேராலயம், பக்தர்களின் காணிக்கை அருங்காட்சியகம், பேராலய கடை மற்றும் வேளாங்கன்னி கடற்கரை போன்றவை காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவருபவைகளாக உள்ளன. அன்னையின் நீரூற்று, புனித ஸ்நானம் மற்றும் அன்னையின் நீரூற்று ஆலயம் ஆகியவை சுற்றலா பயணிகளுக்கு பரவசத்தை ஏற்படுத்தும்.  தற்போது வேளாங்கன்னியில் ஏராளமான நவீன வசதிகள் உள்ளன.
 
குறிப்பாக ஏடிஎம் மையங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் தொடர்வண்டி நிலையம் ஆகியவை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை இருகரம் விரித்து அழைக்கின்றன. பேராலய கடையில் ஏராளமான கைவினைப் பொருள்கள் மற்றும் கிறித்தவ சமயம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் ஒலி நாடாக்கள் போன்றவற்றை வாங்கலாம். மேலும் வேளாங்கன்னி பேராலயத்தில் 24 மணி நேர சேவை மையமும் உள்ளது. இதன் மூலம் பயணிகள் தேவையான சேவைகளைப் பெற முடியும்.

 
Editor's Choice

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்தே இருப்பார்கள். இரவில் உறங்கும் உயிர்கள், மீண்டும் மறுநாள் கண்விழித்து எழுவது என்பதே ஒரு மறுபிறவி போன்றதுதான். அதுவும் ஒரு உயிர் படைப்பு போன்றதுதான். அதனால்தான் ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் அதிகாலையான 4.30 மணி முதல் 6 மணி வரையான காலநேரத்தை, படைப்புக் கடவுளான பிரம்மாவுடன் ஒப்பிட்டு ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று அழைக்கிறார்கள்.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்தால் பல அற்புத நன்மைகள் நிகழ்வதாக சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புத்துயிர் கிடைக்கின்றது. உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் வழங்குகின்றது. கண்கள் -ஆரோக்கியத்தையும், உடல் - வலிமையும் பெறுகின்றன. அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.
 
அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. எல்லாருமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால், நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறும்.
 
சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில், சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது. இந்த அதிகாலை நேரத்தில் உடல் சுறுசுறுப்படையும் என்பதால், சத்தம் இல்லாமலும், பரபரப்பு இல்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதுதான். உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறானாம். அதனால்தான் அதிகாலையை ‘உஷத் காலம்’ என்கிறார்கள். இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் அதிகாலையில் பூமியை நோக்கி பாய்வதால், அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவது விசேஷமான பலனைத் தரும்.
 
பிரம்ம முகூர்த்தத்தில் திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இந்த நேரம் எப்போதுமே சுபவேளை தான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்யத் தொடங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சவுபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.
 
* தெய்வீகத்தன்மை இருக்கக்கூடிய நேரம், பிரம்ம முகூர்த்தம். அந்த நேரத்தில் எழுந்து, உங்கள் பணிகளைத் தொடங்கினால், வாழ்வில் மாற்றத்தை சந்திக்கலாம். நினைத்த காரியங்கள் நிறைவேறும். லட்சுமி கடாட்சம் இல்லத்தில் குடியேறும்.
Editor's Choice
காமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பார்கள். 
 
இதனால் காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது  நம்பிக்கை. மேலும், அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவது என்றால் இதுதான் வழி என்றும் கூறுவர்.
 
திருமண சமயங்களில் கூட, மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள். அதன்பின் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் ஏற்றுவது காமாட்சியம்மன் விளக்கை தான்.
 
மேலும் காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பதும் நம்பிக்கை.
Editor's Choice

செல்வம் நம் வீடுகளில் நிரம்பி வழிய லக்ஷ்மியை வணங்கி, அந்த அஷ்ட லக்ஷ்மி வீட்டில் குடியேற வேண்டுமெனில் நாம் பல வழிமுறைகளை செய்ய வேண்டும். 

முதலில் தினமும் விடியற்காலையில் எழுந்து நம் வீட்டின் வாசலில் பசு மாட்டு சாணம் தெளித்து அதன் பின்  தவறாமல் கோலம் போட வேண்டும். அடுத்தாக அதிகாலையிலே நீராடி இறைவனை வணங்கி அதன் பின் சமைக்க வேண்டும்.

தினமும் காலை சூரிய பகவானை வணங்க வேண்டும். தேவாரம், திருவாசகம் பாடல், கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் வாசித்தல் வேண்டும். மேலும் அன்னதானம் போன்ற நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையேனும் வீட்டை கழுவி விட வேண்டும்.

திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தவறாமல் விளக்கேற்றி இறைவனை வழிபட வேண்டும்.  முடிந்தவரை மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும். மேலும் வீட்டின் பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி நாம் தெய்வத்தை வழிபட்டால் வீட்டில் அஷ்ட லக்ஷ்மி குடியேறி மகிழ்ச்சியை ஏற்படுத்துவாள்.

Editor's Choice

ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினம்தான், 'யுகாதி பண்டிகை'. இந்தப் பண்டிகை, 'உகாதி' என்றும் அழைக்கப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாளே யுகாதிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. யுகத்தின் ஆரம்பம் இந்த நாளில்தான் தொடங்கியது என்பதால், `யுகாதி’ என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. `சைத்ர மாதத்தின் முதல் நாளான இன்றுதான் பிரம்மதேவர் யுகத்தைத் தொடங்கினார்’ என்று பிரம்ம புராணம் கூறுகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கொங்கன் மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள தருமபுரி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களால் யுகாதிப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. மராட்டிய மக்கள் 'குடிபாட்வா ' என்றும், சிந்தி இன மக்கள் 'சேதி சந்த்' என்றும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.

காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து இந்த நாளைத் தொடங்குகிறார்கள். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இடுவார்கள். வயல்களில் விளைந்த தானியங்களை வீட்டின் முகப்பில் கட்டுவதும் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நாளில் பெருமாள், சிவன், கணபதி போன்ற இஷ்ட தெய்வங்களை அலங்கரித்து வழிபடுகிறார்கள். அம்பிகை வழிபாடு இந்த நாளில் விசேஷமாகச் செய்யப்படுகிறது. சிலர், குலதெய்வ வழிபாடும் செய்வார்கள். பூஜையில் பாட்டுப் பாடி வழிபடுவது தெலுங்கு இன மக்களின் வழக்கம். ஒப்பட்லு என்ற பணியாரம், பூரன் போளி, பால் பாயசம், புளியோதரை போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து உண்கிறார்கள். அந்த ஆண்டின் புதிய பஞ்சாங்கத்தையும், பஞ்சகவ்யத்தையும் பூஜையில் வைப்பதும் வழக்கம். 

ஆண்டின் முதல் நாளான இந்த நாளில் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் எனப்படும் பஞ்ச அங்கங்களையும் கூறும் பஞ்சாங்கத்தினை படிக்கும் வழக்கம் பெரியோர்களிடம் இருக்கிறது. நாட்டின் நிலைமை, விளைச்சல், மக்களின் வாழ்க்கை நிலை எல்லாவற்றையும் இந்த நாளில் பஞ்சாங்கத்தின் மூலம்  தெரிந்துகொள்ளும் வழக்கம் இன்றும் கிராமங்களில் உள்ளது. சிலர் ஜோதிடரிடம் சென்று குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நன்மைகளையும் அறிந்து கொள்வார்கள். ஆலய வழிபாடும், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பரிசளிப்பதும் இந்த நாளில் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது. 

யுகாதிப் பண்டிகையின் விசேஷம் என்றால், அது பச்சைப் பச்சடிதான். வாழ்க்கையென்றால் இன்பம், துன்பம், ஏமாற்றம், தோல்வி, வெறுமை, விரக்தி எல்லாமே சேர்ந்ததுதான் என்பதை உணர்ந்த மக்கள், இந்த யுகாதி நாளில் இனிப்பு, காரம், உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவை கலந்த பச்சடியைச் செய்து உண்கிறார்கள். வேப்பம்பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய், மாவடு போன்றவற்றைச் சேர்த்து இந்தப் பச்சடியைச் செய்கிறார்கள். 'பேவு பெல்லா' என இதைக் கன்னட மொழியில் கூறுகிறார்கள்.  

 புதிய முயற்சிகளுக்கு வித்திடும் நாளாக இந்த நாள் அமைவதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே, இந்த நாளில் மங்களமான காரியங்களைத் தொடங்குகிறார்கள். யுகாதிப் பண்டிகையையொட்டி திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள எல்லா ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் இந்த நாளில் நடைபெறும். புத்தாண்டாக மட்டுமன்றி இளவேனிற்காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் இந்த யுகாதி தினம் மராட்டிய, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. 

 

Editor's Choice
உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் தமிழர்களும், குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் சித்திரை மாதத்தின் முதல் நாளைக்  கொண்டாடுகின்றனர்.

பங்குனியின் இறுதி நாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் ‘‘தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்றும், பழமொழி நானூறு ‘‘கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்” என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாகக் கருதப்பட்டது.பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருட கால அளவாகும். சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.

சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் ராசி என்ற குறிப்பு இருக்கிறது. திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து” (வரி 160-161”) தமிழ்ப் பஞ்சாங்கங்களில், ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது. இந்த நாளில் நாம் என்ன செய்கிறோம். வீடு, வாசலைச் சுத்தம் செய்கிறோம். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்து வழிபடும் மரபு தொன்று தொட்டு இருக்கிறது. அதிகாலையில் நீராடி , புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், அநேகமாக எல்லாக் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள்  நடைபெறுவதும் வழக்கம்.

அன்றைய சமையலில் வடை பாயசம் இருந்தாலும், வேப்பம்பூ பச்சடியும், மாங்காய்ப் பச்சடியும் சமைப்பது  மரபாகும். சித்திரையில் மா மரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. வாழ்க்கையின் ஆழத்தையும் இயல்பையும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள் என்பதை, இந்த சமையல் குறிப்பே உணர்த்திவிடும்.

இந்த சித்திரை மாதம். திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும். ஒரு சித்திரையில் பள்ளிக்கூடம் சென்றிருப்பீர்கள்.
ஒரு சித்திரையில் ஏதோ ஒரு துக்க நிகழ்வு நடந்திருக்கும்.ஒரு சித்திரையில் திருமணம் நடந்திருக்கும். எல்லாம் ஒரே சித்திரை அல்ல.
இதோ இந்த ஆண்டு பிலவ ஆண்டு. அறுபது வருட சுழற்சியில் 35 வது ஆண்டு. இந்த ஆண்டும் திரும்பத்திரும்ப வரும். ஆனால், இந்த பிலவ ஆண்டை அதிகபட்சம் மனித வாழ்க்கையில் ஒருமுறைதான் திரும்பவும் சந்திக்க நேரும்.

60 வயதுக்கு உட்பட்டவர்கள், இந்த பிலவ ஆண்டை முதல் முறையாகச் சந்திக்கிறார்கள். அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள், இந்த பிலவ ஆண்டை  இரண்டாம் முறையாகச் சந்திக்கிறார்கள். மூன்றாம் முறையாகவும் இந்த பிலவ ஆண்டைச் சந்திக்க வேண்டும் என்றால், ஆயுள் 120 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க வேண்டும். ஆனால், அது சாத்தியமற்றது.

நாம் மனிதர்களை வாழ்த்தும்பொழுது. அதிகபட்சம் 100 ஆண்டுகள் வாழ்க. என்று வாழ்த்துகின்றோம்.

கார்காலத்தில் மழை பெய்யும். பனிக்காலத்தில் பனி பெய்யும். கோடைகாலத்தில் வெயிலடிக்கும். இலையுதிர் காலத்தில் இலைகள் உதிரும். வசந்த காலத்தில் இலைகள் மறுபடியும் பிறக்கும். இது ஒரு சுழற்சிமுறை. காலம் யாரையும் ஏமாற்றுவது கிடையாது.

காலம் கடந்த பின்னும் ஒருவரை நிலை நிறுத்துவது தெய்வபலமும், தெய்வபலத்தின் அடிப்படையில் அவன் செய்த செயல்களும். காலத்தைக் கட்டுப்படுத்துகின்ற அந்தத்  தெய்வத்தைத்  துதிப்போம். புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.

பக்கம் 1 / 15