ஃபாஸ்டேக் அமலுக்கு வருவதற்கு முன்புவரை, மாற்றுத் திறனாளிகள் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து கட்டணச் சலுகைகளைப் பெற்று வந்தனர். முறையான ஆவணங்கள் இல்லாதபட்சத்தில், அவர்களும் சுங்க வரி செலுத்த வேண்டியிருந்தது.
கட்டண வரிவிலக்கு மாற்றுத்திறனாளிகளின் எல்லா வாகனங்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கு எனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்குத்தான், இந்தியாவில் கட்டண வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. இந்த வரி விலக்கானது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இயக்கப்படும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் உள்ள டோல் பிளாசாக்களுக்கும் பொருந்தும். மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 2 (18) படி, அத்தகைய வாகனங்களைத் `தவறான வாகனம்' என வரையறுக்கிறது. எனவே, உங்கள் வாகனத்தின் முன்பதிவுச் சான்றிதழில் (RC Book), அந்தத் தவறான வாகன பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தைக் காட்ட வேண்டும்.
இதுவரை உள்ள நடைமுறையில் கட்டண வரிவிலக்கு கோரும்போது, தவறான வாகனத்தின் (invalid Carriage) ஓட்டுநர் தொடர்புடைய ஆவணங்களைக் காட்ட வேண்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாக டோல் பூத் ஆபரேட்டரை நம்ப வைப்பதும் நேர விரயத்தை உண்டாக்கியது என்பதே உண்மை. மத்திய அரசு (invalid-carriage) தவறான வாகனமாகப் பதிவுசெய்யப்பட்டவைக்கு இலவச ஃபாஸ்டேக்கை வழங்கி, இந்தப் பிரச்னையைச் சரிசெய்தது. தற்போது ஃபாஸ்டேக் அனைவருக்கும் கட்டாயம் என்றாகியுள்ள நிலையில், அவர்களுக்கு என்ன மாதிரியான சலுகைகள், எந்த முறையில் இருக்கின்றன என்பது குறித்து தெரிந்துகொள்ள, பவன்குமாரிடம் (NHAI - Chennai Regional Officer) கேட்டறிந்தோம்.
`ஃபாஸ்டேக் முறை டிசம்பர் 15, 2019-ல் இருந்துதான், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பிலிருந்தே ஃபாஸ்டேக், மாற்றுத் திறனாளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. அதன் மூலமாகவே அவர்கள் தங்களின் வாகனங்களை, அந்தந்தப் பகுதியின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறையான சான்றுகளைக் கொடுத்து, (In-Valid) தகுதியற்ற வாகனமாக மாற்றிப் பதிவுசெய்து, அதைக் கொண்டு ஃபாஸ்டேக் பெற்று, அனைத்து சுங்கச் சாவடிகளிலும் (Free Of Cost) கட்டண வரி விலக்கு பெற்று வந்தனர். தற்போது ஃபாஸ்டேக் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் இதுவரை பெற்றுவந்த கட்டண வரி விலக்கு எந்தவிதமான மாறுதலுமின்றி தொடரும். இதுவரை ஃபாஸ்டேக்கைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளாத மாற்றுத் திறனாளிகள், தங்கள் அருகில் உள்ள சுங்கச்சாவடி அலுவலகத்துக்குச் சென்று, முன்பதிவு செய்து ஃபாஸ்டேக்கை பெற்றுக்கொள்ளலாம் " என்றார்.
மாற்று திறனாளிகள், தங்களுக்கென பிரத்யேக ஃபாஸ்டேக்கினை எப்படி பெறுவது ?
ஃபாஸ்டேக் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், முதலில் தாங்கள் வசிக்கும் மாவட்டத்தின் மருத்துவமனையை அணுகி விண்ணப்பித்து, தங்கள் குறைபாட்டை நிரூபிப்பதுடன், அதற்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து Disability Certificate பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர், தாங்கள் பயன்படுத்தும் வாகனத்தை, தங்களின் பயன்பாட்டுக்காகப் பிரத்யேகமாக மாற்றிவடிவமைத்து, அதை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காட்டி, தங்கள் வாகனத்தை (Invalid-Carriage) ஆகப் பதிவு செய்துவிட வேண்டும். பின்னர் தேசிய நெடுஞ்சாலை துறையின் வட்டார அலுவலகத்துக்கு நேரில் சென்று Disability Certificate (ph), Invalid Carriage Registration Certificate, ஓட்டுநர் உரிமம் (Handicapped), ஆதார் அட்டை, பான் அட்டை, இருப்பிடச் சான்று, புகைப்படம் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் ஃபாஸ்டேக் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தின் உண்மை நிலை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்ட பின்னர், தபால் மூலமாக ஃபாஸ்டேக் விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். அவற்றை அவர்கள் வாகனத்தின் விண்ட்ஷீல்ட்டில் ஒட்டிவிட வேண்டும். டோல் பிளாசாக்களின் அருகே, அதாவது 20-25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது, அங்கேயுள்ள ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்பச் சாதனம், ஃபாஸ்டேக் மூலம் வாகன விவரங்களை கண் இமைக்கும் நேரத்தில் கண்டறிந்து, வருகைப்பதிவு செய்து வாகனங்கள் முன்னே செல்வதற்கு அனுமதிக்கும். மற்றவர்களைப் போன்று வங்கி கணக்குகளுடன் ஃபாஸ்டேக்கை இணைத்துகொள்ள வேண்டிய கட்டாயமும், ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டிய அவசியமும், மாற்று திறனாளிகளுக்கு கிடையாது!













