ஜப்பானில் பிறப்பு விகிதம் கடும் சரிவு - 120 ஆண்டுகளுக்கு பின் சரிந்துள்ளதாக தகவல்

SOCIAL SHARE
Pin It

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தின.  இதனால் பல தொழில்கள் முடங்கின.  வருவாய் இழப்பு, பொருளாதார தேக்கம் ஆகியவை ஒருபுறம் பாதிப்புகளை ஏற்படுத்தின.  மறுபுறம் கொரோனாவால் உயிரிழப்புகளும் அதிகரித்தன.

இந்நிலையில், ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பானில் கடந்த ஆண்டில் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  சர்வதேச அளவில் ஏற்பட்ட பெருந்தொற்றால் பலரது திருமணமும் நிறுத்தி வைக்கப்பட்டது.
 
இதுபற்றி அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு 8 லட்சத்து 40 ஆயிரத்து 832 குழந்தைகளே பிறந்தன.  இது அதற்கு முந்தின ஆண்டை காட்டிலும் 2.8 சதவீதம் குறைவு ஆகும்.  கடந்த 1899ம் ஆண்டில் இருந்து மிக குறைந்த பிறப்பு விகிதம் கொண்டுள்ளது என தெரிவித்து உள்ளது.
 
இதேபோன்று உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட சீனாவில் கடந்த ஆண்டு புதிதாக பிறந்த குழந்தைகளின் விகிதம் 15 சதவீதம் குறைந்துள்ளது.  இதனால், தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்று கொள்ள கடந்த வாரம் அந்நாட்டு அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டது.
 
தென்கொரியாவிலும் பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக குறைந்து உள்ளது.  கடந்த 2020ம் ஆண்டில் முதன்முறையாக புதிதாக பிறக்கும் எண்ணிக்கையை விட உயிரிழப்புகள் அதிகம் காணப்பட்டன.
 
இதனிடையே, இந்தியாவில் பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. சீனாவின் மக்கள்தொகை 2025-க்குப் பிறகு குறையத் தொடங்கும். அப்போது சீனா உலகின் அதிக மக்கள்தொகை உள்ள நாடு என்கிற தனது கிரீடத்தை இந்தியாவுக்குச் சூட்டிவிடும். அப்போது இந்தியாவில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்த மனிதவளத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப நம்முடைய திட்டங்களைக் கூர்மைப்படுத்த வேண்டும். கல்வியையும் பொதுச் சுகாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போது நல்ல தொழில் சமூகம் உருவாகும். அப்போது நம் மனிதவளத்தின் மதிப்பும் உயரும்.

ARUNACHALAM