மலையாள தடைக்கு வலுத்த எதிர்ப்பு; பின்வாங்கிய மருத்துவமனை..!!

SOCIAL SHARE
Pin It

டெல்லியில் உள்ள ஜிபி பந்த் மருத்துவமனையில் செவிலியர்கள் இனி மலையாள மொழியில் பேசக்கூடாது என நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. 

கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமானது (GIPMER) டெல்லியின் மிகப்பெரும் மருத்துவமனையில் (GB Pant Hospital) உள்ள மையம் ஆகும். இங்கே பணியாற்றும் செவிலியர்கள் அலுவலக மொழியாக இந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மலையாள மொழியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இதற்கு செவிலியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மருத்துவமனையின் சுற்றறிக்கையில் செவிலியர்கள் மலையாள மொழி பேசுவதால் பிற நோயாளிகளுக்கு  அசெளகரியத்தை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதற்கு  செவிலியர்கள் மட்டுமல்லாது பலவேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து மருத்துவமனை, இந்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது. 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் இந்த சுற்றறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்ததோடு, 'மலையாளம் வேறு எந்த மொழியையும் போலவே இந்திய மொழி' என்றார்.

இந்த விவகாரம் குறித்து டெல்லி சுகாதாரத் துறையும் ஜிபி பந்த் மருத்துவமனைக்கு மெமோ அனுப்பியுள்ளது. மறுபுறம், ஜிபி பந்த் செவிலியர் சங்கத் தலைவர் லிலதர் ராம்சந்தானி கூறுகையில், மருத்துவமனையில் மலையாள மொழி பயன்படுத்துவது தொடர்பாக ஒரு நோயாளி சுகாதாரத் துறை மூத்த அதிகாரிக்கு புகார் அளித்ததையடுத்து இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 'சுற்றறிக்கையில் பயன்படுத்தப்படும் சொற்களுடன் சங்கம் உடன்படவில்லை' என்று கூறினார்.

ARUNACHALAM