ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று உலக சாதனை படைத்த பெண்

SOCIAL SHARE
Pin It

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த Gosiame Thamara Sithole என்ற 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனைபடைத்து உள்ளார். இவருக்கு ஏற்கனவே ஆறு வயதில் இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றனர்.

கர்ப்பமாக இருந்த Sithole, பிரிட்டோரியா மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் ஏழு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் என 10 குழந்தைகளை பெற்றார்.  

கர்ப்பமாக இருந்த போது எடுக்கப்பட்ட ஸ்கேன்களில் 8 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்தன. கர்ப்பகாலத்தில் கவலையால் தூக்கமே வரவில்லை என்று Sithole சொல்கிறார். இத்தனை குழந்தைகளை கருப்பை எப்படி தாங்கும்? குழந்தைகள் உயிருடன் பிறக்குமா? ஒன்றுடன் ஒன்று கை-கால்கள் ஒட்டிப் பிறந்தால் என்ன செய்வது? என பல்வேறு கவலைகளால் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார் பத்தும் பெற்ற மகராசி. ஆனால் 10 குழந்தைகளும் இயல்பாகவே இருக்கின்றன. 

பத்து குழந்தைகள் பெற்ற பெண்ணுக்கு இயற்கையான கர்ப்பம் இது, செயற்கை கருவுறுதல் சிகிச்சை எதையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. 

ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் கடந்த மாதம் மாலியாவில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்தது தான் ஒற்றை பிரசவத்தில் அதிக குழந்தைகள் பிறந்த சாதனையாக இருந்தது.  

ஒரே பிரசவத்தில் சித்தோல் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தி குறித்து  பேசிய கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், அமைப்பின் சார்பில் வாழ்த்துக்களையும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.  தற்போது, தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு  முன்னுரிமை அளிப்பதால் தகவலை இன்னும் சரிபார்க்கவில்லை என்று கூறும் அவர், சிறப்பு ஆலோசகருடன் கின்னஸ் குழு இதைப் பற்றி ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

ARUNACHALAM