நா முத்துக்குமாரின் கவிதைகளை பாடலாக மாற்ற முயற்சிக்கும் வசந்தபாலன்!

SOCIAL SHARE
Pin It

தற்போது இயக்குனர் வசந்தபாலன் தனது நண்பர் கவிஞர் நா முத்துகுமாரின் கவிதைகளை பாடல்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நா முத்துக்குமாரின் கவிதைகள் அதிக அளவில் இருப்பதால், ஆர்வமுள்ள ரசிகர்கள் அந்தக் கவிதைகளை பாடலாக மாற்றி எழுதும் படி கேட்டுள்ளார். தேர்வாகும் பாடல்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

“கவிதைக்குள் ஒளிந்திருக்கும் திரைப்பாடலைக் கண்டறியும் கனா!! அல்லது சவால் ! ஜெயில் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து திரை பிரவேசத்திற்குக் காத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து என் பள்ளி நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய URBAN BOYZ STUDIOS நிறுவனத்தில் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது ரசிகர்கள் அறிவீர்கள்.
இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையமைக்கிறார். இந்த படத்தினுடைய கதைப் போக்கில் கவிஞர் நா.முத்துக்குமாருக்கு நினைவேந்தல் செய்வதைப் போல ஒரு கதாபாத்திரமும், சில காட்சிகளும் அமைந்துள்ளது.

இது ஏதேச்சையானதா அல்லது 25ஆண்டு கால நா.முத்துக்குமாருடன் எனக்கு ஏற்பட்ட ஆழமான நட்பின் வெளிப்பாடா அல்லது இரண்டு பேரும் ஜூலை 12 என்ற ஓரே தேதியில் பிறந்ததனால் ஏற்பட்ட மானசீக உறவா அல்லது நான் சோர்வாய் வீட்டில் முடங்கிக் கிடந்த காலத்தில் உப்புக்கறியுடன் என்னை எழுப்பி என்னை பசியாற வைத்த நண்பன் மீது கொண்ட பாசமா என்று தெரியவில்லை.

இந்தக் கதையில் வரும் கதாநாயகி பண்பலை வானொலியில் ஒலிக்கும் திரைப்பாடல்களுடன் இணைந்து பாடல்களைக் கேட்டு ரசித்து பாடுகிற ஒரு கதாபாத்திரம்.

நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகை. மூன்றாம் பிறையிரவில் கதாநாயகனுக்கு நா.முத்துக்குமாரின் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தங்களை கதாநாயகி விளக்க, அவனும் மெல்ல அவனும் மெல்ல நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளில் ஈர்க்கப்படுகிறான்.ர சிக்கிறான். இருவரும் மீண்டும் சந்திக்கும்
ஒரு பௌர்ணமி இரவில் முத்துக்குமாரின் ஒரு பாடல் வரியை கதாநாயகன் உச்சரிக்க, அடுத்த வரியை கதாநாயகி உச்சரிக்க , வரிகள் பாடலாகி, இசையாகி காதல் மலர்கிறது. இந்த தருணத்தில் ஒலிக்கும் ஒரு காதல் பாடலுக்கு பாடல் வரிகள் தேவைப்பட்டது.

நா.முத்துக்குமார் கடல் அளவு கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார். அதிலுள்ள ஒரு காதல் கவிதையை பாடலாக மாற்றவேண்டும். அல்லது சில காதல் கவிதைகளில் இருந்து முத்து முத்தான காதல் ததும்பும் வரிகளை தேர்ந்தெடுத்து முழுப்பாடலாக மாற்றவேண்டும். நோய்மையில் அது மூச்சு முட்டும் பணி. இதில் மற்றொரு சவாலும் இருக்கிறது. கவிதை வரிகள் உரைநடை பாணியில் இருக்கும். இசை சந்தங்களுக்கு பொருத்தமான வரிகள் இருந்தால் தான் இசையமைக்க இசைவாகவும் இருக்கும் அது வெற்றியும் பெறும். இந்த பெரும் பணியில் நா.முத்துக்குமாரின் நண்பனாக , ஒரு திரைப்பட இயக்குநராக நான் மட்டும் ஈடுபடுவதை விட , நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகர்கள் விரும்பினால் என்னுடன் கை கோர்க்கலாம். விரும்பினால் இளம் பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமாரின் கவிதையிலிருந்து சின்ன சின்ன மாற்றங்களுடன் சந்தத்திற்கு ஏற்ற ஒரு பாடலை எழுதி அனுப்பலாம். காட்சிக்கும் இசைக்கும் பொருத்தமாக இருக்கும் பாடலை நானும் இசையமைப்பாளரும் இணைந்து தேர்ந்தெடுத்து திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்வோம்

அப்படி தேர்வாகும் பாடலை ஒருங்கிணைத்த அல்லது எழுதிய அந்த ரசிகருக்கு அல்லது பாடலாசிரியருக்கு நா.மு. கவிதையைத் தேர்ந்தெடுத்து தந்ததற்கு அல்லது சில கவிதைகளை வைத்து பாடலாகத் தொகுத்தமைக்கான அங்கீகாரமும், மரியாதையும், சன்மானமும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் வைத்து வழங்கப்படும். மேலும் நா.மு கவிதைக்கான காப்புத்தொகை நா.முத்துக்குமாரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்
தேர்ந்தெடுக்கப்பட்ட நா.மு.கவிதைகள் அனுப்ப வேண்டிய கடைசி தினம் 30 ஜூன் 2021
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

ARUNACHALAM