ஒரு பெண்ணின் படத்திற்கு முன்னால் ஒரு மனிதன் சுயஇன்பத்தில் ஈடுபடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது."
பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமிர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு காணொளியுடன் பதிவிட்டுள்ளார்.
ஹானியா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினார். அதே நேரலையில், ஒரு ரசிகர் ஹானியாவின் படத்தை வைத்துக் கொண்டு சுயஇன்பம் அடைந்ததைப் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஹானியா, தனது நேரலை காணொளி வழங்கலை நிறுத்தினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, யாரோ ஒருவர் இந்த நேரலையின் காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டார், இது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இந்த காணொளியின் உண்மைத் தன்மையை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. தவிர, சில பயனர்கள் இந்த காணொளி போலியானது என்றும் திரிக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.
காலித் என்ற பயனர், "அவமானம் மற்றும் வெட்கம் காரணமாக, யாரும் இதைப் பற்றி பேசவில்லை. சில நாட்களுக்கு முன்பு இதே நபர்கள் மலாலா யூசுப்சாய்க்கு அவர் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்," என எழுதியுள்ளார்.
நேரலையில் தனது வக்கிரத்தை வெளிப்படுத்திய அந்த ரசிகனைத் தேடிப் பிடித்து, அவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிலர் கூறுகிறார்கள்.
பல பயனர்கள் சமூக ஊடகக் கேலிகளின் உளவியல் விளைவுகள் பற்றி பேசுவதைப் பார்க்க முடிகிறது. உங்கள் கேலியும் கிண்டலும் ஒருவரின் உயிரைக் கூட எடுக்கக்கூடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள் என சிலர் எச்சரிக்கிறார்கள்.
மலாய்க்கா என்ற பயனர் இது தொடர்பாக ஒரு பதிவுத் தொடரை வெளியிட்டார். அதில் அவர் ஹானியாவிற்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தார், மேலும் அவரை கேலி செய்தவர்கள் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியவர்களைக் கடுமையாக விமர்சித்தார்.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஹானியா தனது ரசிகர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் கொடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
"பிரபலமாக இருப்பதால் நாங்கள் பொதுச் சொத்து என்று அர்த்தமல்ல, ரசிகர்கள் என்ற போர்வையில் ஆண்கள் எங்களைத் துன்புறுத்தலாம் என்றும் அர்த்தமல்ல என நடிகை குறிப்பிட்டிருந்தார். இதுபோன்றவர்களை ரசிகர்கள் என்று எப்படி அழைக்க முடியும்? அவர்கள் எங்களை அன்புக்குப் பதிலாக, பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள், எங்களுக்கு சங்கடம், வலி மற்றும் மன வேதனையை ஏற்படுத்துகிறார்கள்' என அவர் கூறியிருந்தார்.













