சித்தர்களின் மருத்துவ - விஞ்ஞானங்கள்!

SOCIAL SHARE
Pin It

சமயத்துக்கு மிகச் சிறந்த தொண்டு செய்த ஞானிகளாகிய சித்தர்கள், மனித உடலின் நலனுக்காக மிக உன்னதமான மருத்துவ முறையையும் எழுதிவைத்தார்கள். அகத்தியர், திருமூலர், சட்டநாதர், இடைக்காடர், மச்சமுனி, புலிப்பாணி, கொங்கணர் போன்ற சித்தர்கள் இவ்வாறு வகுத்துக் கொடுத்துள்ள மருத்துவ சாத்திரம் மிக அருமையானது. இன்று நாம் உபயோகிக்கும் பல்வேறு இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றின் துணை ஏதுமின்றி, அவர்கள் கண்ட மருத்துவ அடையாளங்களும், வியாதிக்கான நிவர்த்திகளும் ஆச்சர்யமானவை.

 

தேகத்தின் சூடு, உடலின் நிறம், நாக்கின் நிறம், குரல், கண்களின் பார்வை, மலஜலம் ஆகியவற்றின் தன்மை இவற்றை நாடித் துடிப்புடன் ஒப்பிட்டு,   உன்னதமான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

 

நாடியை உணருவதற்குச் சுட்டுவிரல், கட்டைவிரல், மோதிர விரல் ஆகிய மூன்றும் பயன்பட்டன. வாயு, பித்தம், சளி ஆகியவை இதன் மூலம் கணிக்கப்பட்டன. கைரேகை பார்ப்பதைப் போலப் பெண்களுக்கு இடது கையும், ஆண்களுக்கு வலது கையும் ஆய்ந்து அறியப்பட்டன. பூதநாடி, குருநாடி, ஆகியவைகளே நுட்பமாகக் கண்டறிய உதவின.  மூளைக்கோளாறு, மனோவியாதி போன்றவற்றைக் கண்டறிய பூதநாடி பயன்பட்டது. சிக்கலானப் பிற வியாதிகளைக் கண்டுபிடிக்க குருநாடி பயன்படுத்தப்பட்டது. இவற்றை உபயோகிக்கத் தன்னலம் இல்லாத பண்பும், குருவின் அருளும், ஆன்மஞானமும், குருவிடம் நீண்டகாலம் சிகிச்சை முறைகளைப் பயிலும் அனுபவமும் தேவை என்பது குறிப்பிடப்பட்டது. உடலைப் பற்றியதானாலும் உள்ளத்தின் மேன்மையைச் சித்தர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள் என்ற அபூர்வப் பண்புக்கு இதுவே சான்றாகும்.

பூஜைக்கு உரிய பசுவின் சாணம் புடம் போடவும் பயன்படுத்தப்பட்டது. பூஜை செய்யப்பட்ட பசுவின் சாணம், இளங்கன்றுக்குப் பால் கொடுக்கும் பசுவின் சாணம், சிவன் கோயிலில் வளர்க்கப்படும் பசுவின் சாணம் என்று இவை தரம் பிரிக்கப்பட்டன. இவற்றிலிருந்து சாஸ்திரீயமான முறையில் வறட்டிகள் தட்டப்பட்டு, பக்குவத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன.

இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை நமது உடலிலும் இருக்கின்றன. ஆகாயம் உடலில் மறைபொருளாக அரைப்பங்கு இருக்கிறது. நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை ஒவ்வொன்றும் அரைக்கால் பங்கு இருக்கின்றன. இந்த ஐந்து இயற்கைப் பொருட்களும் இந்த விகிதப்படி இருந்து வர வேண்டும். மண் நிறைந்துள்ளவை - கேசம், தோல், சதை, எலும்பு, நரம்பு ஆகியவை. நீர் நிறைந்துள்ளவை - கொழுப்பு, இரத்தம், பித்தம், கழிவுநீர், ஆகியவை. நெருப்பு நிறைந்துள்ளவை - பசி, தாகம், தூக்கம், சோம்பல், மேனி அழகு ஆகிய பண்புகள். வாயு நிறைந்துள்ளவை - அசைவு, சுருக்கம், விரிவு ஆகிய தன்மைகள். ஆகாயம் நிறைந்துள்ளவை - வயிறு, இருதயம், மூளை ஆகியவற்றிலுள்ள இடைவெளிகள். இவற்றை சித்தர்களின் சாஸ்திரப்படி கண்டறிந்த முனிவர்கள், மருந்துகள் ஏதுமில்லாமலே வியாதி இன்றி வாழ முடிந்தது. உணவு உட்கொள்ளாமலே பசியும் தாகமும் இன்றி வாழ முடிந்தது. நெருப்பில் நிற்பது, நீர் மேல் நடப்பது, காற்றில் பறப்பது போன்ற அபூர்வச் சித்து வேலைகளையும் நிகழ்த்த முடிந்தது.

 
மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நுட்பமான எல்லா வியாதிகளுமே இந்தக் கணக்கில் வந்துவிடுகின்றன. வெவ்வேறு விதமான 32 களிம்புகளைத் தடவுவதன் மூலமும், 26 உள்ளுக்குச் சாப்பிடக் கூடிய மருந்து வகைகளின் மூலமாகவும் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக அபூர்வமாகவே அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது. சித்தர்களின் வைத்திய முறையில் மூன்று அங்கங்கள் உண்டு. முனிவர்கள் உணர்ந்து அளித்த உலோகங்கள், ரத்தினங்கள், மிருகங்களின் கொம்புகள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டு பக்குவம் செய்து பஸ்மங்கள் தயார் செய்யப்பட்டன. நெருப்பில் உருக்குவது, புடம் வைப்பது, காய்ச்சுவது, வடித்தெடுப்பது ஆகிய முறைகளால் இவைகள்  தயார் செய்ய பயன்பட்டன. பலவகையான நச்சுப் பொருட்களும் மருந்து செய்ய பயன்பட்டன. இந்த அபூர்வ சிகிச்சை முறைகளை அரேபியா, சைனா, துருக்கி, எகிப்து போன்ற வெளிநாடுகள் பலவற்றுக்கும் சித்தர்களும் போகர்களும் பரப்பி இருக்கிறார்கள்.

இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையே சித்தர்களின் மருத்துவ முறையில்தான் அமைந்திருக்கிறது. அவர்களுடைய பாடல்களில் தமிழ் மொழியின் வளம் நிறைந்திருக்கிறது.

ARUNACHALAM