கொரோனா தடுப்பூசிக்கும் ரத்த வங்கிகளில் இருப்பு குறைவதற்கும் என்ன காரணம்?

SOCIAL SHARE
Pin It

தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அதோடு, பல தன்னார்வ அமைப்புகளும் ரத்த தான முகாம்கள் நடத்தி ரத்த வங்கிகளில் சேமிக்கின்றன.

ஆனால் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின் தாக்கம் தன்னார்வலர்கள் பலர் மத்தியில் உயிர்பயத்தை ஏற்படுத்தியுள்ளதால், ரத்த தானம் செய்யவில்லை.

மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்கள் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டு போதிய இடைவெளி விட்ட பிறகே ரத்த தானம் செய்ய முடியும் என்பதால் அவர்களால் சுமார் 70 நாள்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது.

ரத்த வங்கிகளில் சேமிப்பு குறைவாக இருப்பதற்கு இதுவே காரணம் என்கிறார்கள் ரத்த வங்கி அதிகாரிகள்.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 150 ரத்த தான முகாம்களை நடத்தும் சென்னை செஞ்சிலுவை சங்கம் கடந்த ஆண்டு வெறும் 65 முகாம்கள் மட்டுமே நடத்தியது. கொரோனா முதல் அலையின்போது சுமார் 30 சதவீதம் ரத்த வங்கிகளில் சேமிப்பு குறைந்தது. இந்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமாகும் என்கிறது அச்சங்கம்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்னர் ரத்த தானம் செய்துவிட்டு சென்றால், ரத்த வங்கிகளில் தட்டுப்பாட்டை ஓரளவு கட்டுப்படுத்த முடியும், கொடையாளிகள் எல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தொடங்கினால் அவர்கள் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டு பிறகு 30 நாள் இடைவெளி விட்டு ரத்த தானம் செய்துகொள்ள தகுதியாகும் வரை ரத்த வங்கிகளில் வரத்து தட்டுப்பாடு ஏற்படலாம்,'' என்கிறது செஞ்சிலுவைச் சங்கம்.

''சாலை விபத்துகள் கடந்த ஆண்டு குறைவாக இருந்தது. பல அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டன. ரத்தத்தின் தேவை சிறிதளவு குறைந்திருந்தாலும், நம்மிடம் அவசிய தேவைக்கு இருக்கவேண்டிய அளவு ரத்த வங்கிகளில் இல்லை,'' என்றும் அச்சங்கம் கூறுகிறது.

''ஏ நெகடிவ் மற்றும் ஏபி நெகடிவ் உள்ளிட்ட அரிதான ரத்த வகை கொண்ட நபர்களுக்கு உடனடியாக ரத்தம் கிடைப்பது சிரமம். அரிதான ரத்த வகை கொண்ட இளைஞர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்னர், ரத்த தானம் செய்வதற்கு அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும்.

''ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உடனடியாக ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளை உடனடியாக அரசாங்கம் நிறுவுகிறது. ஆனால் ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டால் அந்த தேவையை உடனடியாக தீர்க்க முடியாது. தடுப்பூசி முகாம்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ரத்த தானத்திற்கு இப்போது தரவேண்டும்,'' என்று பலர் கூறுகின்றனர்.

ARUNACHALAM