இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு என, இரு கோவிட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் இந்த தடுப்பூசிகளை செலுத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் மீது தடுப்பூசி ஆய்வுகள் நடத்த, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் கடந்த மே மாதம் 11ம் தேதி அனுமதி அளித்தார். இதையடுத்து, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 12 முதல் 18 வயதுடைய பிரிவினருக்கு தடுப்பூசி ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.
பாட்னாவில் ஏற்கனவே 12 - 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 7 முதல் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், 2 - 6 மற்றும் 6 - 12 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி ஆய்வு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நாடு முழுவதும் உள்ள உடல் வலிமை மிக்க 525 தன்னார்வலர்களுக்கு நடத்தப்படும் எனவும், அவர்களுக்கு 28 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்' எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.













