உப்பை உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான சோடியம் மற்றும் குளோரைடு தாதுக்களைப் பெறுகிறோம். நமது உடல் செயல்பாடுகளுக்கு சோடியம் முக்கியமானது. மேலும் உடலில் திரவ சமநிலையை பராமரிக்க குளோரைடு முக்கியமானது. ஆனால் உப்பை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். சமீபத்தில் வெளிவந்த ஒரு புதிய ஆய்வின்படி, உப்பை அதிகமாக உட்கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்திக்கு, ஆபத்தாகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில், உணவில் அதிக உப்பை சேர்ப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தின் உயிரணுக்களின் பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாட்டை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டது. இதன் காரணமாக உடலுக்கு ஆபத்தான் பாக்டீரியாக்களை நோயெதிர்ப்பு மண்டலத்தால் அழிக்க முடிவதில்லை. ஈ.கோலி (E.Coli) பாக்டீரியாவால் சிறுநீரக நோய்த்தொற்றுகளும் ஏற்படலாம்.
எலிகளை ஆய்வு செய்ய லிஸ்டீரியா பாக்டீரியாக்களை அவற்றுள் செலுத்தின. பாதிக்கப்பட்ட எலிகளில் எந்த எலிகளுக்கு அதிக உப்பு உள்ள உணவு வழங்கப்பட்டதோ, அவற்றின் நிலைமை மிகவும் சிக்கலாக மாறியது கண்டறியப்பட்டது. அதிகப்படியான உப்பை உட்கொள்வதால் உடலின் நியூட்ரோபில்ஸ் எனப்படும் நோயெதிர்ப்பு உயிரணுக்கள் பலவீனமடைகின்றன. இது முக்கியமாக பாக்டீரிய சிறுநீரக நோய்த்தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெரியவர்கள் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் அல்லது 5 கிராமை விட குறைவான உப்பை உட்கொள்ள வேண்டும். இது ஒரு நிலையான அளவாகும். குழந்தைகளில் இந்த அளவு குறைக்கப்பட வேண்டும். இது தவிர, ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவையான உப்பின் அளவு உங்கள் உடல் செயல்பாடுகளின் அளவையும் பொறுத்து இருக்கும்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் கால்சியத்தை அகற்றிவிட்டு சோடியத்தைச் சேர்க்கின்றனர். இதனால் நாம் நீர் அருந்தும்போது நம் உடலில் மறைமுகமாக உப்பு சேர்கிறது. அதேபோல் பன், ரொட்டி போன்றவற்றில் சோடியம் பை கார்பனேட் சேர்க்கிறார்கள். இதனால்தான் பலர் உப்பு சேர்க்கப்படாத ரொட்டி, பிஸ்கட்டுகளை கேட்டு வாங்குவார்கள்.
மனிதனின் உடல் உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். வயது அதிகரிக்க அதிகரிக்க அதன் செயல்திறன் குறையும். 80 வயதாகும்போது சிறுநீரகத்தின் செயல்பாடு மிகவும் குறைவாகவே இருக்கும். இந்தச் சூழலில் உப்பு அதிகம் சேர்த்தால் அவை உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளை தூண்டிவிட்டு சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்றும் தன்மை குறைந்துவிடும். இதனால்தான் கால் மற்றும் உடலில் வீக்கம் ஏற்படும்.
உப்பு தேவையான ஒன்றுதான் என்றாலும் அதிகரித்தால் ரத்த அழுத்தம் கூடி மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக்கோளாறு ஏற்படலாம். அன்றாட உணவில் சேர்க்கும் உப்பின் அளவு அதிகரிக்கும்போது ரத்த நாளத்தின் உட்சுவரில் கொழுப்பு படிந்து செயல்திறன் குறைந்துவிடும்.
உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட சூழலில் உப்பு சேர்த்தால் கூடுதலாக கெடுதலை ஏற்படுத்தும். உப்பு அதிகமானால் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களைவிட ஆண்களே அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில் உப்பைக் குறைத்தாலும் பிரச்சினை ஏற்படும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
உணவில் உப்பை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண், இதயச் சுவரில் வீக்கம், சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் ஏற்படும். ரத்தத்திலும் உப்பின் அளவு அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் எலும்பின் அடர்த்தி குறைந்துவிடும்.
சில நோய்கள் தாக்கும்போது உப்புச் சத்து அதிகரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ரத்தத்தில் யூரியா மற்றும் யூரிக் ஆசிட் எனப்படும் அமிலச் சத்துகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உப்பினை அளவோடு சேர்த்துக்கொள்வது நல்லது”.













