ராமர் இல்லாத ஸ்ரீராமர் ஆலயம் - அதிசயம்

SOCIAL SHARE
Pin It

மத்திய பிரதேசத்தில் ஓடுகின்ற நதிகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது ‘பெட்வா’ என்று சொல்லக் கூடிய நதியும் ஒன்று. இதில் ஓடுகின்ற நதிநீர் வானத்தைப்போல நீலநிறமாக இருக்கும். இந்த நீல வண்ண நதிக்கரையிலே, நதியின் மெல்லிய தென்றல் காற்றினிலே, அமைதியான சூழ்நிலையில் அமைந்திருப்பது ‘ஓர்ச்சா’ என்ற நகரமாகும். இந்த நகரத்திலே பளிங்குக் கற்களாலான பலவிதமான அரண்மனைகள் கண்களைக் கவரும்படியாக அமைந்திருக்கின்றன.

இதில் நம் கண்களைப் பறிக்கும் அரண்மனை ‘ராஜ் மஹால்’ என்ற அரண்மனையாகும். இந்த அரண்மனைக்குள்ளே ராமாயண, மகாபாரதக் காட்சிகளை விவரிக்கும் வண்ண வண்ண ஓவியங்கள் அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்த நாட்டு ராணிக்குத் தனியாகக் கட்டப்பட்ட அரண்மனை ‘ராய் பிரவின் மஹால்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனைக்குள்ளே ஓர் அழகிய ராமர் கோயிலும் இருக்கிறது. ‘ராஜா ராமன்’ என்று அழைக்கப்படும் இக்கோயிலுக்குள் உண்மையில் ராமர் இல்லை. ஆனால், மகாராணியின் ‘ராய் பிரவின் மஹால்’ என்றழைக்கப்படும் அந்த அரண்மனையில் தான். ‘சதுர்புஜ ராமராக’ சிறிய வடிவில் அமைந்துள்ளார்.

இந்த ராமரை ‘ராமராஜா’ ஆலயத்திற்கு தரிசிக்க வரும் பக்தர்கள், அந்த ஆலயத்தில் வெற்றிடமாக உள்ள இடத்திலே ராமர் இருப்பதாக மனதில் தியானத்து வணங்கிவிட்டு, மகாராணியின் அரண்மனையில் இருக்கும் ஸ்ரீ ராமரையே தரிசித்து அருள் பெறுகின்றனர்.  ராமபிரானுக்கு நடைபெறும் அத்தனை பூஜைகள், ஆராதனைகள், திருவிழாக்கள் அனைத்தும் இந்த மகாராணி அரண்மனையிலே நடைபெறுகிறது.

இந்த ஆலயத்தில் நான்கு திசைகளிலும் நான்கு ஆஞ்சநேயர்கள் இருக்கின்றனர். ராம பிரானுக்கு ஆரத்தி முடிந்ததும் அந்த ஆரத்தியை’ ஆஞ்சநேயருக்கு முன்னால் வைத்து வழிபடுகின்றனர். அந்த ஆரத்தி ஜோதியை ஆஞ்சநேயர் அயோத்திக்கு எடுத்துச் செல்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இரண்டாவது அயோத்தி என்றழைக்கப்படும் இந்த ‘ஓர்ச்சா’ ராமர் கோயிலிருக்கும் இந்த ராமரை அந்த நாட்டு மன்னராக மக்கள் வழிபடுகிறார்கள். ஒவ்வொருநாளும் காலையில் காவல் துறையினர் இந்த ஆலயத்திற்கு வந்து ஸ்ரீராமருக்கு மரியாதை செலுத்திய பின்புதான் பக்தர்கள் ஸ்ரீராமரை தரிசிக்க வேண்டுமென்பது விதிமுறையாக இங்கு உள்ளது. இரவு வேளையில் ஸ்ரீராமர் அயோத்தியில் உறங்கிவிட்டு, அதிகாலையில் இந்த அரண்மனைக்கு வந்துவிடுவார் என்பது ஐதீகம்.

மகர சங்கராந்தி, ஸ்ரீராமநவமி வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் விசேஷமாக பூஜைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் வருவார்கள். இந்த ‘‘ராஜாராம் மந்திர்’’ மத்திய பிரதேசத்திலுள்ள ஜான்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில்  அமைந்துள்ளது.

ARUNACHALAM