துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆறு மனைவிகளில் ஒருவருக்கு பிறந்த 30 பிள்ளைகளில் ஒருவர் இளவரசி லதிபா அல்-மக்தூம், அவருக்கு வயது 35. லதிபா தந்தையின் பிடியிலிருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறிவிட திட்டமிட்டார்.
அதன்படி, 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், லதிபா அல்-மக்தூம்வின் உடற்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த டினா ஜவுஹைனென் என்னும் பெண், பிரான்ஸ் நாட்டவரும் நண்பருமான ஒரு முன்னாள் உளவாளி என சிலரது உதவியுடன் அரண்மனையிலிருந்து தப்பினார்.
எட்டு நாட்களுக்குப் பின், இந்தியப் பெருங்கடலில், படகு ஒன்றில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, ஒரு வழியாக விடுதலை பெற்றுவிட்டேன் என லதிபா நிம்மதிப் பெருமூச்சு விடும் நேரத்தில், பயங்கரம் ஒன்று நிகழ்ந்தது.
படகுகளில் வந்த அமீரக போலீசார் லதிபா இருந்த படகை சூழ்ந்துகொண்டு, இளவரசிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
கண் விழிக்கும்போது, துபாயில் ஒரு அறையில் இருந்த லதீபாவிடம், காவலாளி ஒருவர் நீ இனி சூரியனைப் பார்க்கவே முடியாது என்றார்!
லதிபாவுடன் கைது செய்யப்பட்ட பின்லாந்து நாட்டவரான டினா இரண்டு வாரங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்டதும், அவர் இளவரசி லதிபாவின் கதையை வெளி உலகுக்கு சொல்ல, இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் துபாய் மன்னரை நெருக்குகின்றன. லதிபா உயிருடன் இருக்கிறாரா என தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட, லதிபாவை சந்திக்க, ஐக்கிய நாடுகளின் முன்னாள் உயர் ஆணையரான மேரி ராபின்சன் வந்தார்.
ஆனால், மேரி ராபின்சனிடம் லதிபாவுக்கு மன நல பிரச்சினை என்றும், லதிபாவிடம் நண்பர் ஒருவர் உன்னைப் பார்க்க வருகிறார், நீ சாதாரணமாக இருப்பதுபோல் நடித்தால் சில நாட்களில் துபாயிலிருந்து வெளியேறிவிடலாம் என்றும் பொய் சொல்லி இருவரையும் சந்திக்கவைத்தனர்.
லதிபா மகிழ்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படங்களை மேரி ராபின்சன் வெளியிட்டார்.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு லதிபாவிடமிருந்து, டினாவுக்குஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருப்பது முதல், தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து குளியலறையில் இருந்து லதிபா தெரிவித்தார். இதனையடுத்து அவரின் தொலைபேசி பேச்சு வைரலானது. அவரை பற்றிய சந்தேகங்களும் அதிகரித்தன.
அந்த வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து, இங்கிலாந்து, துபாய் இளவரசியின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளதுடன், அவர் உயிருடன் இருப்பதை நிரூபிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தை வலியுறுத்தியுள்ளது. இங்கிலாந்து வெளியுறவு அமைச்சரான டொமினிக் ராப் , இளவரசி லதிபா கடத்தப்பட்டு சூரிய ஒளி கூட கிடைக்காமல் வீடு ஒன்றில் சிறைவைக்கப்பட்டிருப்பது குறித்து கேள்விப்பட்ட மக்கள், அவர் உயிருடனும், நலமாகவும் இருப்பதை அறிய விரும்புவார்கள் என்றார்.
அத்துடன், லதிபா பிரச்சினையை அமீரகத்துடன் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையிலும் எழுப்ப இருப்பதாகவும், என்ன நடக்கிறது என்பதை உற்றுக்கவனிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













