எகிப்து மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கூட்டுக் குழு, எகிப்தின் அபைடாஸில் இருக்கும் பழமையான மதுபான வடிப்பாலையை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த அபைடாஸ் எனும் இடம், பாலைவனத்தில் இறந்தவர்களை புதைக்கும் இடமாகும்.
பீரை தயாரிக்க, தானியங்கள் மற்றும் நீர் கலந்த கலவையைப் பயன்படுத்தினார்கள். அந்த கலவையை சூடுபடுத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும், சுமார் 40 பாத்திர பண்டங்களைக் கொண்ட பல அலகுகளை இந்த கூட்டுக் குழு கண்டுபிடித்துள்ளது.
சுப்ரீம் கவுன்சில் ஆஃப் ஆன்டிக்ஸ் என்கிற அமைப்பின் கருத்துப்படி, இந்த பீர் வடிப்பாலை அரசர் நார்மரின் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அதுமட்டுமின்றி, உலகிலேயே அதிக அளவில் பீர் ரக மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட, மிகப் பழமையான வடிப்பாலையாக இது இருக்கலாம் என நம்புவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
நார்மர் அரசர் 5,000 ஆண்டுகளுக்கு முன் இப்போதைய எகிப்து நாட்டில் ஆட்சி செய்தார். அவர் தான் எகிப்தை ஒருங்கிணைத்து முதல் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர் எனக் கருதப்படுகிறது.
இந்த பீர் வடிப்பாலையில் 8 பெரிய பகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 20 மீட்டர் நீளம் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் சுமாராக 40 மண் பாத்திர பண்டங்கள் வரிசையில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கின்றன.
"எகிப்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்த பின் செய்யப்படும் இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான பீரை விநியோகிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, இந்த வடிப்பாலை பாலைவனத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நல்லடக்கம் செய்யும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம்" என எகிப்தின் சுற்றுலா துறை அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில், அலெக்சாண்ட்ரியாவுக்கு அருகில் நடந்த அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டு பழமையான தங்க நாக்குகளைக் கொண்ட மம்மிக்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.













