மலர்கள் பூத்துக் குலுங்கும் வசந்த காலம், இயற்கை விரும்பிகளுக்கு பிரியமான காலம். ஆனால், சுவாச ஒவ்வாமை உள்ளோருக்கு, காற்றில் பரவும் மகரந்த துகள்கள் பெரிய அவஸ்தையை அளிக்கும்.
அமெரிக்காவிலுள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பருவநிலை மாற்றத்திற்கும், தாவரங்கள் மகரந்தம் உற்பத்தி செய்யும் காலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
பருவநிலை மாற்றத்தால், உலகெங்கும் வெப்பநிலை கூடி வருகிறது. இதனால், தாவரங்கள் பூ விடும் பருவமும் முன்கூட்டியே தொடங்கிவிடுவதாக யூட்டா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால், காற்றில் மகரந்த துகள்கள் விரவும் காலமும் அதிகரித்துள்ளது.
இதனால், மூச்சுத் திணறல், சளி, ஆஸ்துமா போன்றவற்றுக்காக மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை கூடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தின் கடும் விளைவுகள் அடுத்த, 50 ஆண்டு களுக்குப் பிறகுதான் தெரிய வரும் என்பது இல்லை. இப்போதே அதன் பாதிப்புகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கு உதாரணம்தான் மகரந்தப் பருவம் நீடித்திருப்பது என்கின்றனர் யூட்டா விஞ்ஞானிகள்.













