சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஏராளமான மக்கள் உயிர் இழந்தனர். பலருக்கு வாழ்நாள் முழுவதற்குமான உடல் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. உலக பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இந்த வைரசைப் பற்றி முன்னரே அறிந்திருந்தும், சீனா இதைக் குறித்த எச்சரிக்கையை உலகுக்கு அளிக்காமல் மறைத்து விட்டது. சீனா செய்த இந்த தவறுக்கான விளைவுகளை மனித இனமே இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.
சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் உருவாகி பரவியதன் யதார்த்தத்தை வெளிக்காட்டிய பத்திரிகையாளர் ஜாங் ஜான் சிறையில் உள்ளார். சிறையில் இருந்து அவர் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்தில் வுஹானில் உள்ள ஒரு மருத்துவமனை நடைபாதையில் வரிசையாக நோயாளிகள் இருந்த காட்சிகளை ஜாங் பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் உலகின் கவனத்தை ஈர்த்தார்.
மற்றொரு வீடியோவில், அவர் மருத்துவமனையை படம் பிடிப்பைத் தடுக்க முயன்ற ஒரு பாதுகாப்பு அதிகாரியை ஜாங் அமைதியாகக் கையாள்வதைக் காண முடிந்தது.
ஏழு மாதங்களுக்குப் பிறகு, 37 வயதான அவருக்கு சண்டைகளைத் துவக்கி பிரச்சனைகளை உருவாக்கியதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட சட்டவிரோத தண்டனையை எதிர்த்து அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால், ஜாங் மிகவும் மெலிந்து அடையாளம் காண முடியாத நிலையில் இருக்கிறார் என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நாசி குழாய்கள் வழியாக அவருக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்கப்பட்டதாக வழக்கறிஞர் கூறினார்.
"சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து, அவர் தனது சட்டவிரோத தண்டனைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறார்," என்று ஜாங்கிற்காக போராடும் சட்டக் குழுவின் உறுப்பினர் கூறினார்.
சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து சீன அரசாங்கம் செய்வது தவறு என்பதையும், தனக்கு இழைக்கப்பட்ட தண்டனை சட்டத்தையும் தனி மனித உரிமையையும் மீறும் வகையில் உள்ளது என்பதையும் அவர் எடுத்துக்காட்ட விரும்புகிறார்.













