ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் நீண்டகாலமாகவும், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் கொடுமைகள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐ.நாவின் தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், சீனா உட்பட 11 நாடுகள் எதிராக வாக்களித்தனர். இந்தியா, ஜப்பான் உட்பட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த மாதம் நடப்பு கவுன்சில் அமர்வின் தொடக்கத்தில், இலங்கை வெளியுறவு மந்திரி தினேஷ் குணவர்தன, இந்த தீர்மானத்தை அரசியல் நோக்கம் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்.
இலங்கையில் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இறுதி போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டு, அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து பகுதிகளையும் இலங்கைப் படை கைப்பற்றியது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தது. இந்த போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இலங்கை அரசின் கொடூர வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல நாடுகள், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர். இலங்கை போரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைகள் உட்பட பல மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டது. எனவே இலங்கை மீது சர்வதேச விசாரணை அமைக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் பிரிட்டன் தீர்மானம் கொண்டு வந்தது.
இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா புறக்கணித்ததை அடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.













