ஒடிசாவில், எட்டு மாத கர்ப்பிணியை, உச்சி வெயிலில் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடக்கவிட்ட பெண், எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
மயூர்பஞ்ச் மாவட்டம், சரத் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் வசிக்கும் விக்ரம் பரூலி, எட்டு மாத கர்ப்பிணியான அவரது மனைவியை, மருத்துவப் பரிசோதனைக்காக அருகில் உள்ள நகருக்கு, சமீபத்தில், இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். வழியில், போலீஸ் எஸ்.ஐ., ரீனா பக்ஸல் தலைமையில், போலீசார், அந்த வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
விக்ரம் பரூலி, 'ஹெல்மெட்' அணிந்திருந்த நிலையில், அவரது மனைவி அணியவில்லை. 'கையில் போதிய பணம் இல்லை. ரசீது கொடுத்தால், அபராதத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்துகிறேன்' என, விக்ரம் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த, எஸ்.ஐ., ரீனா பக்ஸல், வாகனத்துடன் விக்ரமை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று, மூன்று மணி நேரம் காவலில் வைத்துள்ளார்.
நடுரோட்டில் அனாதையாக விடப்பட்ட கர்ப்பிணி மனைவி, கணவரைத் தேடி, போலீஸ் ஸ்டேஷனுக்கு, 3 கி.மீ., துாரம், உச்சி வெயிலில் நடந்தே வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, அவர்களது புகாரின் அடிப்படையில், போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நடந்த சம்பவங்கள் உறுதியானதால், பணியில் நடத்தை விதிகளை மீறியதாக, எஸ்.ஐ., ரீனா பக்ஸல், அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.













