அண்ணனை விஞ்சும் தங்கை; தென்கொரியாவை மிரட்டும் கிம் யோ ஜாங்

SOCIAL SHARE
Pin It

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் செவ்வாயன்று தென் கொரிய அதிபரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளை “கவலை அளிப்பவை” என்று குறிப்பிட்டதற்காக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் கொரியா, அமெரிக்கா மற்றும் வட கொரியா பேச்சுவார்த்தைகளில் இடையூறு எதுவும் ஏற்படுத்தக் கூடாது என்று யோ ஜாங் மேலும் கூறினார்.

கடந்த வாரம், ஜப்பானின் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே வட கொரியா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனால், அங்கே பதற்றம் அதிகரிக்கக் கூடும் என்ற சூழ்நிலை உருவாகியது.

ஜப்பான் அருகே கடலில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா (North Korea) ஏவியுள்ளது என ஜப்பான் பிரதமர் யோஷிஹிடா சுகாவும் உறுதி படுத்தினார். 

ஜப்பான் அரசு வெளியிட்ட அறிக்கையில், மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம், மேலும் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து கண்காணித்து வருகிறோம் என கூறியது. 

கிம் யோ ஜாங், தென்கொரியா  அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாக விமர்சித்தார்.

ஏவுகணை சோதனையை அமெரிக்கா கண்டித்ததோடு, வட கொரியாவின் அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன எனக் கூறியது

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் நிர்வாகம் தவறான  நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், அதன் தற்காப்பு ஏவுகணை சோதனையை விமர்சிப்பதன் மூலம் "ஆழ்ந்த விரோதத்தை" வெளிப்படுத்தியதாகவும் வட கொரியா அமெரிக்காவிற்கும் கண்டன அறிக்கை வெளியிட்டது.

ARUNACHALAM