ஒவ்வொரு ஆண்டும் கடந்து போய்க்கொண்டே தான் இருக்கிறது. இந்த 2020ம் ஆண்டு ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது. காரணம் கொரோனா எனும் கொடிய நோய் உலகை நிலைகுலைய செய்துவிட்டது.
இதனால் 2020க்கு மக்கள் குட்பை சொல்லியும், புத்தாண்டு நல்லதாக அமைய வேண்டும் என 2021-ஐ வரவேற்றும் மக்கள் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் டுவிட்டரில் இந்த விஷயம் தான் டிரெண்டிங்கில் உள்ளது. பெரும்பாலும் #GoodBye2020, #lastdayof2020, #HappyNewYear2021, #Happy2021, #Year2020 ஆகியவை தான் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின்றன.
2020ம் ஆண்டு தங்களுக்கு எப்படி இருந்தது என்பதை கருத்துக்காக பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 2020, கொரோனா பாதிப்பு ஆண்டாகத்தான் அமைந்தது. அதனால் அது தொடர்பான விஷயங்கள் தான் டுவிட்டரில் பலரும் கருத்தாக பதிவிட்டு வருகின்றனர். என்னதான் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டாலும், அதேசமயம் ஊரடங்கால் குடும்பத்தினர் உடன் பலரும் நேரத்தை செலவிட முடிந்தது. அந்த சின்ன சந்தோஷத்தையும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் 2020ல் தாங்கள் சாதித்த விஷயத்தையும், சறுக்கிய விஷயத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.
கொரோனாவையும் தாண்டி புயல் உள்ளிட்ட பல இன்னல்களும் இந்தாண்டில் கடந்து போனது. இத்தனை இடர்கள், துன்பங்கள் கடந்து சென்றாலும் மக்களின் நம்பிக்கை மட்டும் குறையவில்லை. தங்கள் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வரும், சோகங்கள் நீங்கி சுகங்கள் பெருகும், வரும் ஆண்டாக நல்லதொரு ஆண்டாக அமையும் என நம்புகின்றனர். கொரோனா எனும் கொடிய அரக்கன் நம்மை விட்டு நீங்குவான் என்ற நம்பிக்கையோடு 2021 புதிய ஆண்டை வரவேற்போம்.













