சீன கோடீஸ்வரரும், சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா நிறுவனருமான ஜாக் மா, கடந்த இரண்டு மாதங்களாக வெளியில் தலைகாட்டவில்லை. அவர் காணாமல் போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அலிபாபா நிறுவனர் ஜாக் மா, மிகப்பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர், கடந்த அக்.,24ம் தேதி, சீன அரசு, தொழில் நிறுவனங்கள் மீது விதித்துவரும் கட்டுப்பாடுகள் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், தொழில் நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள் 'வயோதிகர்கள் மன்றம்' என்றும், காலத்திற்கு ஏற்ப இவர்கள் மாறவேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார். இதனால் கோபமடைந்த சீன அரசு, அலிபாபா நிறுவனம் மீது அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
சில நாள்களுக்கு முன்பு, அலிபாபா நிறுவனம் போட்டியாளர்களுக்கு உரிய வாய்ப்பினைத் தராமல், நயவஞ்சமாக செயல்பட்டிருக்கிறது என்று புதிய விசாரணையைத் துவக்கியது. அலிபாபா நிறுவனத்தின் மீது சீன அரசு இப்படி தொடர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக ஜாக் மா, வெளியில் வராமல் இருக்கிறார்.
கடந்த நவ., இறுதியில் புதிய தொழில்முனைவோர்களைக் கண்டறியும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர் குழுவில் ஜாக் மா இடம்பெற வேண்டிய நிலையில், அவருக்கு பதிலாக அலிபாபா நிறுவனத்தின் வேறொரு உயரதிகாரி இடம்பெற்றார். ஜாக் மாவுக்கு வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என அலிபாபா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டு மாதங்களாக பொதுவெளியில் தலைக்காட்டாமல் காணாமல் போயுள்ள ஜாக் மா குறித்த உண்மைகளை சீன அரசு மறைப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.













