காற்று மாசால் அதிகரிக்கும் கருக்கலைப்பு

SOCIAL SHARE
Pin It

வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கருக்கலைவு நிகழ்வதற்கும் காற்று மாசுபாட்டிற்கும் முக்கிய தொடர்பு இருப்பதாக லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டின் விளைவையும், கருக்கலைவையும் மதிப்படும் முதல் ஆய்வாக இது கருதப்படுகிறது. "தெற்காசியாவில் ஆண்டுக்கு 3,49,681 கருக்கலைவுகள் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவை. 2000 முதல் 2016 வரையிலான, ஆண்டு கருக்கலைவில் இது 7 சதவீதமாகும்" என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள காற்று தர வழிகாட்டுதலை விட அதிகம் இருக்கும் காற்று மாசினால் 29 சதவீதம் கருக்கலைவுகள் நிகழ்த்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருக்கலைவு ஏற்பட்ட 34,197 பெண்களை இந்த ஆய்வில் உட்படுத்தியுள்ளனர். அவர்களில் 27,480 பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. 6,717 பேருக்கு குழந்தை இறந்து பிறந்துள்ளது. கருக்கலைவில் 77 சதவீதம் இந்தியாவில், 12 சதவீதம் பாகிஸ்தானில், 11 சதவீதம் வங்கதேசத்தில் பதிவாகியிருக்கிறது.

செயற்கைக்கோள் மற்றும் வளிமண்டல நிகழ்வுகளின் இடஞ்சார்ந்த மாற்றங்களை அளவிட்டுள்ளனர். பின்னர் காற்று மாசுக்கு எந்த அளவுக்கு கர்ப்பிணிகள் ஆட்பட்டிருக்கிறார்கள் என்பதையும், பெண்களின் கருக்கலைவு அபாயத்தை இது எந்தளவு அதிகரிக்கிறது என்பதையும் மதிப்பிட்டுள்ளனர்.

ஒரு கன மீட்டர் பரப்பில் 10 மைக்ரோ கிராம் அளவிற்கு மாசு அதிகரித்தாலும் கருக்கலைவுக்கான அபாயம் 3 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

ARUNACHALAM