பெண் நீதிபதியின் பதவிக்காலம் ஓராண்டாக குறைப்பு!

SOCIAL SHARE
Pin It

பெண்ணை ஆடையுடன் தொடுவது பாலியல் துன்புறுத்தலில் சேராது என சர்ச்சை தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் பதவிக் காலத்தை ஓராண்டாக குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீதிபதி புஷ்பா கனேதிவாலா வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கான வழக்கறிஞர்கள் குழுவில் பணியாற்றினார். மேலும் அமராவதியின் பல்வேறு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராகவும் இருந்தார். 2007-ல் நேரடியாக மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். 2019-ல் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். ஜன., 19 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை விசாரித்த இவர், தோலோடு தோல் தொடர்பின்றி சிறுமியின் மார்பகத்தை பிடிப்பது போக்சோ சட்டப்படி குற்றமில்லை என்ற அதிர்ச்சி தீர்ப்பு வழங்கினார்.

5 வயது சிறுமி பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்தவர், சிறுமியின் கையை பிடித்திருப்பதோ, பேண்ட் ஜிப் திறந்திருப்பதோ பாலியல் வன்முறை ஆகாது என கூறி குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்தார். இந்த தீர்ப்புகளை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், அவர் மீது வழக்கு தொடர அரசுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் 2 ஆண்டுகளாக இருந்த அவரது கூடுதல் நீதிபதி பதவிக் காலத்தை ஓராண்டாக குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் அவரை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை திரும்பப் பெற்றது.

ARUNACHALAM