சிவஸ்தலம் பெயர்:
திருக்குருகாவூர்வெள்ளடை(திருக்கடாவூர்)
இறைவன் பெயர்:
வெள்ளடையீஸ்வரர், வெள்விடை நாதர், சுவேத ரிஷபேஸ்வரர்.
இறைவி பெயர்:
நீலோத்பவ விசாலாட்சி, காவியங்கன்னியம்மை.
தேவாரம் பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார்.
தேவாரப்பதிகம்:
(சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்=ஏழாம் திருமுறை)
இத்தனை யாமாற்றை
யறிந்திலேன் எம்பெருமான்
பித்தனே யென்றுன்னைப்
பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை
மாணிக்க முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே!!
பொழிப்புரை:
எங்கள் பெருமானே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, உனது திருவருட் செயல் இத்துணையதாயின காரணத்தை யான் அறிந்திலேன் ; உன் இயல்பினை அறியாதவரெல்லாம் உன்னை, ` பித்தன் ` என்று இகழ்ந்து பேசுவர் ; அஃது அவ்வாறாக, நீ, முத்தையும் மாணிக்கத்தையும், பிற மணிகளையும் தோற்றுவித்த வித்தாய் வெளிப்பட்டவன் அன்றோ!
அமைவிடம்:
ஊர்: திருக்கடாவூர்
மாவட்டம் மயிலாடுதுறை
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்:
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: பால் கிணறு
உற்சவர்: சோமாஸ்கந்தர்
ஆகமம்: சிவாகமம்
பழமை:1000 வருடங்களுக்கு முன்
பொது தகவல்:
இத்தல விநாயகர் #செல்வ_விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு மேலே குடையும், இரண்டு சாமரங்களும் இருக்கின்றன.
பொதுவாக முருகன் கிழக்கு திசை நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்குள்ள #முருகன் வள்ளி தெய்வானையுடன் #தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார்.
தென் திசையை பார்த்திருப்பதால் இவரை குரு அம்சமாக கருதி வழிபடுகின்றனர். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது.
கோஷ்டத்தில் சட்டைநாதர், துர்க்கையம்மன் சன்னதிகள் உள்ளன. இந்த துர்க்கை எட்டு கைகளுடன் காட்சி தருவது விசேஷம். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது.
பிரகாரத்தில் சிவலோக நாதர், பூலோகநாதர், பைரவர், சூரியன், சந்திரன், மாவடி விநாயகர் ஆகியோரது சன்னதிகள் உள்ளன.
தல வரலாறு:
சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர், மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்.
இவ்வாறு சமணர்களை கழுவேற்றிய பாபம் நீங்க, சம்பந்தர் காசிக்குச் சென்று கங்கையில் நீராட விரும்பினார். தான் காசிக்கு செல்ல அருளும்படி சீர்காழி தலத்தில் சிவனிடம் வேண்டினார்.
சம்பந்தருக்கு காட்சி தந்த சிவபெருமான், அவரை காசிக்குச் செல்ல வேண்டாம் என்றும், இத்தலத்திற்கு கங்கையை வரவழைத்து தருவதாகவும் கூறினார்.
அதன்படி இங்கு வந்த சம்பந்தர் சிவனை வேண்டினார், அவருக்கு காட்சி தந்த சிவபெருமான் இங்குள்ள #கிணற்றில்_கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர் பாவம் நீங்கப்பெற்றார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது.
தலபெருமை:
ஒருநாள்_மட்டும்_நீராடும்_தீர்த்தம்:
தை அமாவாசை அன்று காலையில் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து, சம்பந்தருடைய உற்சவம் விக்ரகம் இந்த தீர்த்தத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அச்சமயம் இக்கோவிலில் உள்ள சிவன் அம்பாள் அவருக்கு காட்சி கொடுத்து தீர்த்தம் கொடுக்கின்றனர். அதன் பின்பு மாலையில் சம்பந்தர் மீண்டும் சீர்காழி செல்கிறார். இந்த வைபவம் இங்கு வெகு விமரிசையாக நடக்கிறது.
அன்னமிட்ட_கை :
சிவஸ்தல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது இந்த பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. எனவே அவரால் இக்கோயிலை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இத்தலத்து சிவனை தரிசிக்காமல் சென்றுவிட்டார்.
வழியில் அவருக்குப் பசி எடுத்தது, அப்போது ஒரு முதியவர் அவர் முன்பு சென்றார், சுந்தரரிடம் அவரருகில் ஓரிடத்தை சுட்டிக்காட்டி, தான் அவ்விடத்தில் சிவனடியார்களுக்கு அன்னம் பரிமாறுவதாகவும், அங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்படியும் கூறினார்.
அதன்படி சுந்தரரும், அவருடன் வந்த அடியார்களும் சாப்பிடச் சென்றனர். அவர்களை முதியவர் உபசரித்தார், அதன் பிறகு சாப்பிட்ட கலைப்பில் அன்னப்பந்தலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் சுந்தரர், சற்று நேரம் கழித்து அவர் கண்விழித்தபோது, அங்கு அன்னப்பந்தலோ, சாப்பாடு பரிமாறியதற்கான தடமும் தெரியவில்லை.
வியந்த சுந்தரர், தனக்கு அன்னம் பரிமாற வந்தது சிவபெருமான் என்று உணர்ந்து, பின்பு அவரை வேண்டவே அவர் இத்தலத்தை அடையாளம் காட்டினார். பின்பு இங்கு வந்த சுந்தரர் சிவனை வேண்டி பதிகம் பாடினார்.
சுந்தரருக்கு சிவன் அன்னம் பறிமாறிய விழா,#சித்ரா_பௌர்ணமியன்று நடக்கிறது. இங்கு வந்து சிவபெருமானை வேண்டிக் கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
சாந்த துர்வாசர்:
இக்கோயிலில் பிரகாரத்தில், துர்வாச முனிவர் சாந்த கோலத்தில் சிரித்தபடி காட்சி தருகிறார். இவர் இடது கையில் ஏடு வைத்து, வலக்கையில் அருள் செய்தபடி காட்சி தருவது விசேஷம்.
தலச்சிறப்பு:
இத்தலத்தில் சுவாமி #சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார்.
சம்பந்தருக்காக, இங்கு #தை_அமாவாசை தினத்தன்று கிணற்றில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் தற்போதும் தை அம்மாவாசை அன்று மட்டுமே இக்கிணறு திறக்கப்பட்டு, பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படுகின்றனர், மற்ற நாட்களில் இந்த தீர்த்தத்தை திறப்பது கிடையாது.
திருவிழாக்கள்:
சித்ரா பவுர்ணமியில் கட்டமுது படையல் விழா, மற்றும் தை அமாவாசையன்று கிணற்றில் கங்கை பொங்கிய விழா.
ஆலய_முகவரி:
அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில்,
திருக்கடாவூர்,
வடகால் (அஞ்சல்),
சீர்காழி (வட்டம்),
மயிலாடுதுறை (மாவட்டம்)
PIN:609115
தொடர்புக்கு: 9245612705
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் மெய்க்காவலர் அருகில் வசிப்பதால் அவரை தொடர்பு கொண்டு தரிசிக்கலாம்.
எப்படிப் போவது?
சீர்காழியிலிருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலை மார்க்கத்தில் 6 கி.மீ ல் உள்ள வடகால் என்னும் கிராம நிறுத்தத்தில் இறங்கி, தெற்கே 1 கி.மீ சென்றால் திருக்கோயிலை அடையலாம், கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
- A. Gurumoorthi













