சக்தி பீடமான நாகர்கோட் ஸ்ரீ வஜ்ரேஸ்வரி திருக்கோயில், காங்ரா,ஹிமாச்சல் பிரதேஷ்

SOCIAL SHARE
Pin It
சப்தமாத்திரிகா அல்லது அஷ்ட மாத்திரிகா சம்பிரதாயத்தில் இன்று தேவியை ஸ்ரீ மஹா வஜ்ரேஸ்வரி அல்லது ஸ்ரீ முக்தீஸ்வரி தேவி வடிவில் வழிபடுவர் .
 
திதி நித்யா தேவிகளில் ஆறாவது தேவியான மஹா வஜ்ரேஸ்வரிக்கு நான்கு திருக்கரங்கள். பாசம், அங்குசம், கரும்பு வில், மாதுளம் கனி போன்றவற்றை தன் திருக்கரங்களில் தாங்கியுள்ளாள். நானாவித ரத்னங்களால் பிரகாசிக்கும் அணிகலன்களை அணிந்தருளும் தேவியிவள்.
 
கருணை மழை பொழியும் கண்கள் அடியவரை அனவரதமும் காக்கின்றன. புன்சிரிப்போடு கூடிய திருமுகத்தை உடையவள்.சிவப்புப் பட்டாடை அணிந்து, நவரத்தினங்களால் ஆன கிரீடமும், ஒட்டியாணமும் அணிந்துள்ளாள். கைகளில் இடப்பட்ட மருதாணி அழகாகப் பொலிகின்றது. பாதங்களில் தண்டையும் சதங்கையும் அணிந்துள்ளாள். இந்த அம்பிகை படகில் நவரத்தினங்களுடன் பிரகாசிக்கும் சிம்மாசனத்தில், பத்மாசனத்தில் அமர்ந்தவள். தேவரும், முனிவரும் பணிந்தேத்தும் பாத கமலங்களை உடையவள்.
 
நெற்றியில் ஒளிரும் மூன்றாவது கண் இவள் முக்காலத்தையும் உணர்ந்தவள் என்பதை உணர்த்துகிறது. அன்னையின் கரத்திலுள்ள பாசம் லௌகீக பந்தங்களை மாற்றித் தன் வயம் ஈர்க்கும். அடங்கா மனத்தையும் அடங்க வைக்கும். அங்குசம் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும். கரும்பு வில்லும், மாதுளங்கனியும் நன்மைகளின் குறியீடுகள். தன்னை நிகர்த்த சக்திக் கூட்டங்களுடன் எப்போதும் துலங்குபவள் இந்த மஹா வஜ்ரேஸ்வரி தேவி. இவள் மஹா வஜ்ரேஸ்வரி எனப்படுவதன் காரணமே இந்த அன்னையின் ஆற்றலின் பொருட்டுத்தான். தன் பக்தர்களை எல்லா துன்பங்களிலிருந்தும் காத்து கரை சேர்ப்பவள் இவள். இத்தேவியை ஆராதிப்பவர்கள் வாழ்வில் மேன்மையுறுவர்.
 
சக்தி பீடங்களில் ஜாலாமந்திர் பீடத்தின் அதிதேவதையாக இந்த அம்பிகை போற்றப்படுகிறாள். லலிதா தேவி விரும்பி வசிக்கும் ஸ்ரீநகரத்தின் ௧௨ ஆம் மதில் வஜ்ரமணியால் ஆனது. அதற்கு அதிதேவதை இவள் என துர்வாஸ முனிவர் தன் லலிதாஸ்தவரத்னம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
‘பவதாவ ஸூதா வ்ருஷ்டி:’ இந்த நாமத்துக்கு நேரடியாக அர்த்தம் எப்படிச் சொல்வது? காட்டிலே தீப்பிடித்து விட்டால், அதை அணைக்க நாம் ஒரு குடம் ஜலம் கொண்டு போனால் போதாது. ஆனால், ஆகாசத்துலேருந்து பெரிய வ்ருஷ்டி: (மழை) வந்தால்தான் அந்தக் காட்டுத் தீ அணையும். இந்த சம்சார சக்ரம் என்கிற இந்த காட்டுத் தீக்கு அவளுடைய அனுக்ரஹம் என்பது ஒரு பெரிய மழை. அப்பேர்ப்பட்டவள் இந்த சம்சார பயத்தை போக்கக் கூடியவள். சகல ரோகங்களையும் தேவி நிவர்த்தி ஆக்குவாள். எந்த விதமான அப ம்ருத்யுக்களும் தேவி உபாசகர்களுக்கு வராது.
 
இப்பேர்ப்பட்ட மகிமை பரதேவதைக்கு இருப்பதனாலே நாம் அந்தப் பரதேவதையை ஆராதிக்கிறோம். அனைவரும் அம்பிகையை ஆராதித்து அதிக வரங்களைப் பெற்றிடலாம். வழிபடு பலன் இத்தேவியை வழிபட அக்ஞானம் அகன்று ஞானம் விருத்தியாகும். மனிதர்கள் படும் அனைத்து துக்கங்களையும் வேரோடு களையும் மகா சக்தியாக துக்கநாசினியாக இத்தேவி திகழ்கிறாள்.
 
மஹாவஜ்ரேஸ்வரி தேவி காயத்ரி:
 
ஓம் மஹாவஜ்ரேஸ்வர்யை வித்மஹே
 
வஜ்ர நித்யாயை தீமஹி
 
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.
 
மூலமந்த்ரம்:
 
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லின்னே ஐம் க்ரோம் நித்ய மதத்ரவே ஸ்வாஹா.
 
வஜ்ரேஷ்வரி கோவில் – இது தேவியின் மார்பகங்கள் அல்லது இடது மார்பகம் விழுந்த இடம் இது ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது. அசுரனுடன் போரிட்டதால் ஏற்பட்ட புண்களுக்கு நெய் தடவி வழிபடுவர்.
 
இந்த கோவிலில் சதி தேவியின் இடது மார்பகம் விழுந்ததாக நம்பப் படுகிறது. இங்கே குடி கொண்டிருக்கும் தேவியின் பெயர் வஜ்ரேஷ்வரி தேவி. ஜம்மு வைஷ்ணவதேவி கோவில் போலவே இங்கேயும் தேவியைப் பிண்டி ரூபத்தில் வழிபடுகிறார்கள். லலிதா சஹஸ்ரநாம வரிகள் வஜ்ரேஸ்வரி வாமதேவி என்றவை நம் மனதில் வருகிறது. தாரா அல்லது வஜ்ரேஸ்வரி “ரெய்கி”யின் தேவதையாகக் கருதப் படுகிறாள்.
 
காங்க்டா தேவி என்று சொல்லப்படும் வஜ்ரேஷ்வரி தேவி கோவிலுக்கு நாகர்கோட் தாம் என்றும் கோட் காங்க்டா என்றும் பெயர்கள் உண்டு. சதி தேவியின்
 
இடது மார்பகம் இந்த இடத்தில் தான் விழுந்தது என்று சொல்வது போலவே வேறு சில கதைகளும் உண்டு.
 
மஹிஷாசுரனை வதைத்த போது வஜ்ரேஷ்வரி தேவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அப்புண்களை குணப்படுத்த அதன் மேலே வெண்ணை தடவிக் கொண்ட்தாகவும் கதை உண்டு. இப்போழுதும் மகர சங்கராந்தி தினத்தன்று வஜ்ரேஷ்வரி தேவிக்கு வெண்ணைக் காப்பு செய்கிறார்கள்.
 
கோவிலின் பிரகாரத்தில் சில சன்னதிகள் உண்டு. மகா காளிக்கு என ஒரு மூலையில் சன்னதி. சன்னதியின் வெளியில் அட்ட்ரா புஜி தேவி – பதினெட்டு கைகளுடன் தேவியின் உருவம் இருக்கிறது. முன் நாட்களில் அங்கே ஆடு, கோழி போன்ற விலங்குகளை பலி இடுவது வழக்கமாக இருந்திருக்கிறது.
 
சில வருடங்களாக பலி இடுவது முற்றிலும் தடை செய்யப்பட, இப்போது காளியின் பலி பீடத்தில் இரத்தம் சிந்துவதில்லை!
 
இக்கோவிலிலும் உங்கள் பெயரைச் சொல்லி, ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ கொடுத்தால், மேளத்தினை தட்டி, ”இன்னாருக்கு நல்லதையே கொடு” என்று தேவியிடம் அவர்களும் பிரார்த்திக்கிறார்கள். பெரும்பாலான ஹிமாச்சலப் பிரதேசக் கோவில்களில் இந்த வழக்கம் இருக்கிறது.
 
அடுத்து நாம் பார்க்கப் போவது மிகப் பழமையான ஒரு சிகப்பு பைரவர் சிலை. கிட்டத்தட்ட 5000 வருடம் பழமையான சிலை கம்பிக் கதவுகள் வழியே இந்த சிகப்பு பைரவரை வேண்டிக்கொண்டோம். இந்த சிகப்பு பைரவர் சிலைக்கு ஒரு கதை உண்டு. அது என்ன கதை? பார்க்கலாமா?
 
ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு இயற்கைச் சீற்றத்தின் காரணமாகவோ, அல்லது அன்னிய நாடுகளின் தாக்கத்தினாலோ ஆபத்து வருவதற்கு முன்னதாகவே சிகப்பு பைரவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதோடு, மேனியும் வியர்த்து விட ஆரம்பித்து விடுமாம். 1905-ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தினை தாக்கிய நில நடுக்கத்திற்கு
 
முன்னரும் இப்படி நடந்ததாக குறிப்பிடுகிறார்கள்.
 
அனைத்து சக்கரங்களின் தாய் சக்கரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தில் ௪௩ [43 ]முக்கோணங்களில் மைய முக்கோணத்தில் வீற்றிருக்கும் ௧௫ தேவியர் தாம் இந்த திதி நித்யா தேவியர் .
 
- A. Gurumoorthi
 

ARUNACHALAM