பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள் கிடைக்காதா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இத்தகைய நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் தேவை அவசியமாகிறது. இச்சூழலில்தான் சென்னை ஐஐடி மாணவர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனமான பைபீம் நிறுவனம், சமீபத்தில் பைமோ என்ற மின்சார பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை ஸ்மார்ட்போனைவிட வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.
சைக்கிள் போல் தோற்றமளிக்கும் இந்த பைமோ வாகனம், குறைந்த வேகத் திறன் கொண்ட மின்சார வாகனம் என்பதால் இதை ஓட்டுவதற்கு உரிமம், பதிவு தேவையில்லை. பைமோ வாகனத்தின் விலை ரூ.30 ஆயிரம்தான். பேட்டரி இடமாற்ற வசதியும் இதில் உள்ளது. இதில் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியில் இருந்து மற்றொன்றுக்கு சக்தியை பரிமாறிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் குறிப்பிட்ட எலெக்ட்ரானிக் பைக்குகளில் பைமோவும் ஒன்றாகும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரிகள் உள்ளிட்ட சாதனங்களில் 90 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும். இதில் எல்இடி லைட், ஒலி எழுப்பி, இருசக்கர டிஸ்க் பிரேக் என பல சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. இதில் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 50 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். இதை முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணிநேரமே ஆகிறது. இதில் சாக்கப்சர் உட்பட அனைத்து சௌகரியங்களும் இருக்கிறது. இதில் சிறப்பு வசதிகளாக ஸ்விங் ஆர்ம் மெக்கானிஸ்ம், ட்யூவல் ஷாக் அப்சார்பர் மற்றும் மிகவும் மிருதுவான இருக்கை உள்ளிட்டவை பொருத்தப்பட்டிருக்கின்றன.













