சீனாவைச் சேர்ந்த, ‘அலிபாபா’ நிறுவனத்துக்கு, அந்நாட்டிலிருக்கும் ஒழுங்குமுறை அமைப்பு, மிக அதிகளவிலான அபராதம் விதிக்க கூடும் என, அமெரிக்காவின், ‘வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
சீனாவின் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவரான, ஜேக் மாவுக்கு சொந்தமான நிறுவனம், அலிபாபா. இந்நிறுவனத்துக்கு தான் இப்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்திருப்பதாக கூறி, நிறுவன நம்பிக்கைகள் குறித்த கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும், அலிபாபாவுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதே போன்ற காரணத்துக்காக, ‘குவால்காம்’ நிறுவனத்துக்கு, 7,080 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அலிபாபாவுக்கு இதை விட அதிகளவிலான அபராதம் விதிக்கப்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. அண்மைக் காலமாக அலிபாபா நிறுவனர் ஜேக் மாவுக்கும் சீன அரசுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து, ஜேக் மாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது.கடந்த டிசம்பர் மாதத்தில், அலிபாபா மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளது, அலிபாபா நிறுவனம்.













