இந்த இடத்தில் மாந்தோப்பு சாத்தியமில்லை என வேளாண் துறையினர் தெரிவித்தனர். அதே இடத்தில் 300 ஏக்கரில் அல்போன்சா மாந்தோப்பை உருவாக்கி ஏற்றுமதியிலும் சாதித்து வருகிறார், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஏ.கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன்.
பண்ணைக்குள் நீர்த்தேக்க கண்மாயில் மழை நீரை நிரப்பினேன். ஆனாலும் உப்பு நீராகவே இருந்தது. பண்ணை ஓரங்களில் பத்தடி ஆழத்தில் வாய்க்கால்கள் வெட்டி அனைத்து வாய்க்கால்களையும் ஒன்றாக இணைத்து மழைநீரை சேகரித்தேன். நிலத்தடி நீர் உயர்ந்தது. பண்ணைக்குள் உள்ள நான்கு கிணறுகளில் சுத்தமான நீர் கிடைத்தது. பெங்களூருவில் இருந்து அல்போன்சா கன்றுகளை வாங்கி நடவு செய்தேன். 10 மீட்டருக்கு ஒன்று என 300 ஏக்கரில் 10 ஆயிரத்திற்கு மேல் மரக்கன்றுகளை நட்டேன். அனைத்திற்கும் சொட்டுநீர்ப் பாசனம், இயற்கை உரம் தான். நல்ல வெயில், காற்று, இயற்கை உரத்தில் தங்க நிற மாம்பழங்கள் கிடைத்தன. ஆண்டு முழுவதும் காய்க்காது. இப்போது சீசன்.
இன்னும் 15 நாட்களில் அறுவடை தொடங்கிவிடும். ஒரு டன், 2 டன் வீதம் ஜூன் வரை அறுவடை நடக்கும். ஆர்கானிக் பழங்கள் என்பதால் விலையும் கிடைக்கிறது. ஆண்டுக்கு 500 டன் வரை கிடைக்கும். பாதிக்கும் மேல் ஏற்றுமதி செய்கிறேன். கருங்குளம் அல்போன்சா என்றால் இந்தியாவிலேயே பிரசித்தம் என்ற பெருமையை பெற்றுள்ளேன். கோவை வேளாண் பல்கலை விஞ்ஞானிகளும் ஆய்வு செய்துள்ளனர். தென்னை மரங்கள், செஞ்சந்தன மரங்கள் வளர்க்கிறேன்.
விவசாயிகளுக்கு மரவிவசாயம் சிறந்தது என்பேன். அதிலும் மா வறட்சியைத் தாங்கி வளரும். சொட்டுநீர் பாசனம் அமைத்தால் கூலியாட்கள் தேவை குறையும். என்னுடைய 300 ஏக்கரில் நீர்ப்பாசனம் செய்ய 3 பேரே உள்ளனர். அடர்நடவு விவசாயத்தில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காய்க்காது. பராமரிப்பு அதிகம். என்னுடைய மரங்கள் நல்ல இடைவெளியில் வளர்வதால் சூரியவெளிச்சம், காற்று, தண்ணீருடன் ஆரோக்கியமாக வளர்கிறது என்றார்.தங்கமாக காய்க்கும் கருங்குளம் அல்போன்சா













