வாகனப் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த வகையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு, கூடுதலாக பசுமை வரி விதிக்க, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த ஜனவரியில் அனுமதி அளித்தது. இந்த பசுமை வரி வாயிலாக வசூலிக்கப்படும் தொகையை, சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியிடுவதற்கு முன், மாநில அரசுகளின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு, பசுமை வரி விதிக்கும் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. மேலும், 15 முதல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனங்களை பயன்படுத்துவோர், அதை தானாக முன்வந்து பயன்பாட்டில் இருந்து அகற்றும் திட்டத்தை, 2021 - 22ம் ஆண்டுக் கான பட்ஜெட்டில், மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுதும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள வாகன விபரங்களை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுதும், நான்கு கோடி வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளன. இதில், இரண்டு கோடி வாகனங்கள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இந்த பட்டியலில், 70 லட்சம் வாகனங்களுடன், கர்நாடகா முதலிடம் வகிக்கிறது. உத்தர பிரதேசத்தில், 56.54 லட்சம் வாகனங்களும்; டில்லியில், 49.93 லட்சம் வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளன. இந்த வரிசையில் கேரளா நான்காம் இடமும், தமிழகம் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.













