புலியை கொன்றவருக்கு பரிசு வழங்கிய மராட்டிய அதிகாரிகளுக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள போராடி வனப்பகுதியில் வசித்துவந்த புலி மனிதர்களை குறிவைத்து வேட்டையாடி வந்தது. இந்த புலியின் கோரப்பசிக்கு 13 பேர் இரையாகினர். இதனால் மனித உயிருக்கு பங்கம் விளைவிக்கும் அந்த புலியை கொல்லவேண்டும் என்ற வேண்டுகோள் வலுத்தது. இந்தநிலையில் வனப்பகுதியில் குட்டிகளுடன் சுற்றித்திரிந்த அவ்னி என்ற பெண் புலி தான் மனிதர்களை வேட்டையாடும் புலி என வனத்துறையினர் சந்தேகித்தனர். இதன்படி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி வனத்துறையினர் அந்த புலியை சுட்டுக்கொன்றனர். மேலும் இந்த புலியை சுட்டு கொன்றவருக்கு விருதும் வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதா தோக்ரா என்பவர் மும்பை ஐகோர்ட்டில் வழங்கு தொடர்ந்தார். ஆனால் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் நாடினார். இந்த வழக்கு தலைமை நீதிபதி போப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போபன்னா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சுட்டுக்கொல்லப்பட்ட பெண் புலி அவ்னி மனிதர்களை கொல்லவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக சங்கீதா தோக்ரா வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அந்த மிருகம் மனிதனை உண்டதா? இல்லையா? என்பதை எப்படி பிரேத பரிசோதனைல் கண்டுபிடிக்க முடியும்” என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ஒரு விலங்கு மனிதனை தின்றதா என்பதை அதன் முடி, நகங்கள் மற்றும் குடலில் உள்ள டி.என்.ஏ. அறிக்கையில் இருந்து அறிய முடியும். இந்த டி.என்.ஏ. 6 மாதங்கள் மேலாக நீடிக்கும்.
அதுமட்டும் இன்றி கொல்லப்பட்ட பெண் புலியின் வயிறு காலியாக இருந்தது. புலியை கொன்றவருக்கு அரசால் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதை கொண்டாடவும் செய்தனர். இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும்” என தெரிவித்தார்
இதையடுத்து கொண்டாட்டத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாது என கூறிய நீதிபதிகள், அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி புலியை கொன்றவர்களுக்கு வெகுமதி அளித்ததற்காக மராட்டிய முதன்மை செயலாளர் விகாஸ் கார்கே மற்றும் 8 அதிகாரிகளுக்கு கோர்ட்டு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.













