ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், அதன் லிங்குகள் ஆகியவற்றை தங்களின் தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை அடுத்து கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்தன.
புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப் போவதாகவும் அச்சுற்றுத்தல் விடுத்தது. எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்ததை அடுத்து மோதல் முற்றியது.
இந்நிலையில், முக்கிய ஆஸ்திரேலிய ஊடகங்களுடன், இது தொடர்பாக கூகிள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. செய்திகளுக்கு வெளியிட பணம் செலுத்துவது தொடர்பான ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் ஒரு உயர் அரசு அதிகாரி திங்களன்று கூறினார்.
ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, அதில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். உலகம் முழுவதும் உன்னிப்பாக இந்த விஷயத்தை கவனித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரைடென்பெர்க்கின் அறிக்கைகள், ஆஸ்திரேலியாவின் முக்கிய ஊடக அமைப்புகளான ரூபர்ட் முர்டோக்கின் நியூஸ் கார்ப் மற்றும் நைன் என்டர்டெயின்மென்ட் போன்றவை இதேபோன்ற ஒப்பந்தங்களை எட்டும் நிலையில் உள்ளன என்பதை தெரிவிக்கிறது.
உலகெங்கிலும் பெரிய டிஜிட்டல் தளங்களின் வருகையால் செய்தித்தாள்கள் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.













