Editor's Choice
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. தியேட்டரில் விசிலடித்து, ஆரவாரம் செய்து படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு, மாஸ்டர் படம் விருந்தாக அமைந்துள்ளது. படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு போடப்பட்டது. அப்போது விஜய்யின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். 
 
தற்போது வரை மக்கள் மத்தியில் இருந்தும், திரையுலக பிரபலங்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மாஸ்டர். உலகளவில் பல நாடுகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் நியூசிலாந்து நாட்டில் முதல் நாள் வசூலில் சுமார் ரூ. 30 லட்சம் வரை வசூல் செய்து தென்னிந்தியளவில் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
 
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், நடிகர்கள் சாந்தனு, தீனா, அர்ஜுன் தாஸ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் முதல் காட்சியை கண்டுகளித்தனர்.
 
இப்படத்தை காண திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களில் திரையரங்கில் சென்றது மட்டுமின்றி மாஸ்டர் படம் குறித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவா கார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.
 
மாஸ்டர் படத்தின் அதிகாலை காட்சியை சென்னையில், ரசிகர்களுடன் சேர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷும் பார்த்துள்ளார். காரில் மாஸ்டர் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கிறேன் என அவர் இன்ஸ்டாவில் போட்ட ஸ்டோரி வைரலாகியது.
 
ஒரு வருடத்திற்கு பிறகு, தியேட்டரில் இப்படியொரு படத்தை பார்ப்பது ரொம்பவே எக்ஸைட்டிங்காக இருக்கு, இது மாஸ்டர் பொங்கல் டா என கிரீத்தி சுரேஷ் டுவீட் போட்டுள்ளார்.
Editor's Choice

கலப்பு திருமணங்கள் செய்யும் ஜோடிகள் பற்றிய தகவல்களை பதிவு அலுவலகங்களில் அறிவிப்பு செய்ய வேண்டியது கட்டாயம் என விதி இருக்கும் நிலையில், அது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

சிறப்பு திருமணங்கள் சட்டம் 1954-ன் படி கலப்பு திருமணங்கள் செய்பவர்கள் மாவட்ட திருமண அதிகாரிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு வழங்க வேண்டும். அவர் அதன் நகலை அறிவிப்பு பலகையில் பொது மக்கள் பார்வையில் படும்படி ஒட்டுவார். திருமணம் செய்பவர்களின் சொந்த மாவட்ட அலுவலகத்திலும் இந்த அறிவிப்பு ஒட்டப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் திருமணம் வயது, மனநிலை போன்ற விதிகளை மீறியிருந்தால் 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் இந்து ஆணை திருமண செய்வதற்காக இந்து மதத்திற்கு மாறினார். ஆனால் அப்பெண்ணின் தந்தை திருமணம் தொடர்பாக பிரச்னை செய்துள்ளார். எனவே அப்பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார். மனுவில், சிறப்பு திருமண சட்டம் மூலம் எங்கள் திருமணத்தை உறுதிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அதற்கு 30 நாட்கள் அறிவிப்பு தேவைப்படுகிறது. அதன் மூலம் பெருமளவு ஆட்சேபனை உண்டாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் சவுதிரி ஒரு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், “இது போன்று அறிவிப்பு வெளியிடுவது அடிப்படை உரிமைகளான சுதந்திரம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றின் மீது படையெடுப்பதாகும். மேலும் அது யாருடைய குறுக்கீடும் இல்லாமல் திருமணத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான, தம்பதியினரின் சுதந்திரத்தையும் பாதிக்கும். எனவே கலப்பு திருமணம் செய்பவர்கள் அறிவிப்பை வெளியிடலாம் அல்லது வெளியிடக்கூடாது என்று எழுத்துப்பூர்வமாக திருமண அதிகாரிக்கு கோரிக்கை வைக்க முடியும்.” என்று கூறியுள்ளார்.

Editor's Choice

சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ள, உலக சுகாதார நிறுவன வல்லுநர் குழு கொரோனா எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவ சீனா தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது. இதனிடையே உலக நாடுகளின் அழுத்தத்தை அடுத்து சீனாவில் ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருந்தது.

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சுக் குழு தங்கள் நாட்டுக்குள் நுழைய கடந்த ஆண்டு இறுதியில் சீன அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சியை மேற்கொள்ள இந்த மாதம் சீனா செல்ல திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், திடீர் திருப்பமாக உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய கடந்த வாரம் சீன அரசு அனுமதி மறுத்தது.
 
இதனிடையே நீண்ட இழுபறிக்குப் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆராய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு சீனா சென்றடைந்தது.
 
சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ள 10 பேர் கொண்ட வல்லுநர் குழு, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு கள ஆய்வைத் தொடங்க உள்ளது. அதுவரை உலக சுகாதார நிறுவன குழுவினர், வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக சீன மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
Editor's Choice
படப்பிடிப்பு தளத்திற்கு நடிகை ரகுல் பிரீத் சிங் சைக்கிளில் சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
 
தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார். பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் 'மே டே' என்ற படத்தில் நடிகை ரகுல் நடித்து வருகிறார்.
 
இந்த படத்தில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ரகுல் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார்.
 
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 கிலோமீட்டர் சைக்கிளில் செல்வது தனக்கு நல்ல அனுபவமாக இருந்ததாக பதிவிட்டுள்ளார். மேலும் சைக்கிளில் சென்ற வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
Editor's Choice

சயின்ஸ் அட்வான்ஸ் என்ற இதழில் உலகின் பழங்கால குகை ஓவியம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்தோனேஷியாவில் 45 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் வரைந்துள்ள ஓர் பன்றி குகை ஓவியம் பழம்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் கிரிஷிப்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மாக்ஸிம் ஆல்பர்ட் கூறுகையில், இந்தோனேஷியாவில் உள்ள சுலாவெசி தீவில் கடந்த 2011-ஆம் ஆண்டு பழம்பொருட்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அங்கு இருந்த பழமையான லிங்க்ஸ்டேட் குகைக்குள் உள்ள லைம்ஸ்டோன் வகை கற்கள் குறித்து ஆராய்ச்சி நடந்தது.

அப்போது 136 செ.மீ., நீளமும் 54 செ.மீ., அகலமும்கொண்ட ஓர் பன்றியின் ஓவியம் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பன்றி மற்றொரு பன்றியை நோக்கி இருப்பதுபோல இந்த பழங்கால ஓவியம் காட்சியளிக்கிறது. மற்றொரு பன்றியின் ஓவியம் சிதிலமடைந்துள்ளது. இந்தோனேசியாவின் இந்த தீவில் கடந்த 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்குடியினர் இதனை வரைந்து இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இது தற்போது பழம்பொருள் பிரியர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

ஊரடங்கு விதிமுறையில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சி சென்ற பெண், போலீசிடம் சிக்கினார்.

கொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணிகளுடன் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கியூபெக் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை நாயாக பாவித்து நடைபயிற்சி சென்று போலீசிடம் மாட்டியுள்ளார்.

செல்லப்பிராணிகளை நடைபயிற்சி செல்லலாம் என கூறப்பட்டதால், தனது கணவரின் கழுத்தில் சங்கிலியை மாட்டி வீதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளார். இதனை கவனித்த போலீசார் அரசின் அறிவிப்பை மீறியதற்காக தம்பதியர் இருவர் மீதும் விதிமீறலுக்கான வழக்கு பதிந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.3.44 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பக்கம் 73 / 90