Editor's Choice

ஜப்பானில், அரசியல் மற்றும் பொருளாதாரத்திலிருந்து பெண்கள் விலக்கியே வைக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் லிபரல் டெமாக்ரெடிக் கட்சி, ஆண்கள் மட்டுமே பங்கெடுக்கும் உயர்மட்ட கூட்டங்களில், ஐந்து பெண் அரசியல்வாதிகள் பங்கெடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இந்த கூட்டங்கள் நடைபெறும்போது, அவர்களுக்கு பேச அனுமதி இல்லை, கூட்டம் முடிந்த பின்பு, தங்களின் கருத்துகளை அவர்கள் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

உலக பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள பாலின இடைவேளி அட்டவணை 2020இல், இடம்பெற்றுள்ள 153 நாடுகளில் ஜப்பான் 121ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த 1955ஆம் ஆண்டு முதல் பெரும்பான்மையான காலங்களில் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்துள்ள இந்த கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பட்டியலில்12 பேர் உள்ளனர். அதில் வெறும் இருவர் மட்டுமே பெண்கள்.

அக்கட்சியின் பொதுசெயலாளரான 82 வயதாகும் டோஷிஹிரோ நிகாய், ஆலோசனைக்கூட்டங்களில் விவாதிக்கப்பாடும் விஷயங்களில் பெண்களின் பார்வை என்ன என்பதை அறிய அவர்களின் பங்கேற்பும் தேவை என்று கூறினார்.

"எந்த வகையான ஆலோசனைகள் நடக்கின்றன என்பதை அவர்கள் தெரிந்துகொள்வது முக்கியம். என்ன நடக்கிறது என்று அவர்கள் பார்க்க வேண்டும்." என்று அவர் கூறினார்.

இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஜப்பான் ஊடகங்கள், முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட கூட்டங்களில் ஐந்து பெண் உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என்றும், இந்த கூட்டங்களில் அவர்களுக்கு பேச அனுமதி இல்லை என்றும் தெரிவித்தன. தங்களின் கருத்துகளை, கூட்டம் முடிந்த பின்னர் உதவியாளரின் அலுவலகத்தில் அவர்கள் சமர்ப்பிக்கலாம் என்றும் அவை கூறின.

சீனாவின் பிரதிநிதிகள் சபையில் 465பேரில் வெறும் 46பேர் மட்டுமே பெண்கள். அதாவது வெறும் 10% மட்டுமே பெண்கள்; உலகளவில் இதன் சராசரி அளவு 25% ஆக உள்ளது.

இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் நிர்வாகக் குழுவில் அதிக பெண்களை சேர்ப்பது குறித்த கூட்டத்தில் பேசிய யோஷிரோ மோரி, " அந்த பெண்களின் பேசும் நேரத்தை நாம் அளவாக வைக்கவேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு பேச்சை முடிப்பது என்பது கடினமாக இருக்கிறது." என்று பேசினார்.

இதற்கு அதிக எதிர்ப்பலைகள் வந்ததைத் தொடர்ந்து, தனது "முறையற்ற கருத்துக்காக" கடந்த வெள்ளிக்கிழமை அவர் பதவி விலகினார்.

அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில பெண் அரசியல்வாதிகள் வெள்ளை ஆடை அணிந்து போராட்டம் செய்தனர். டோக்கியோவின் ஆளுநரான யுரிக்கோ கொய்கீ, ஒலிம்பிக் அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று மறுப்பு அறிவித்தார்.

ஒலிம்பிக் போட்டியில் தன்னார்வலர்களாக பணியாற்ற பதிவு செய்திருந்தவர்களிலிருந்து 400 பேர் தாங்களாகவே விலகிக்கொண்டனர்.

ஜப்பானிய பெண்களுக்கு இயல்பாக கூறப்படும் பாலின பாகுபாட்டு கருத்துகள் என்பது பல ஆண்டுகளாக பழகிப்போன ஒரு விஷயம்.

இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஷின்சோ அபே-வின் அரசு, 2020 ஆம் ஆண்டுக்குள், பெண் தலைவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்தது. அந்த எண்ணிக்கையை எட்ட முடியாத நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட, அடிப்படையில் ஜப்பானின் கல்வி முதல் வேலைக்கு ஆட்களை எடுப்பது வரையிலான பல கட்டங்களில் மாற்றங்கள் செய்யவே அரசு முயல வேண்டும் என்று விமர்சகர்கள் பலகாலமாக தெரிவித்து வருகின்றனர்.

Editor's Choice

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் சர்மா, ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக், ரிஷப் பந்த், சஹல், அக்சர் படேல், புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், சைனி, தாக்கூர், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, ஐபிஎல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மீத் குறைந்த விலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.  கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும், நடப்பு ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க ஸ்டீவ் ஸ்மித் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், ஏலத்தின்போது, ஸ்டீவ் ஸ்மித்தின் அடிப்படை தொகையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஸ்டீவ் ஸ்மித்தை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வராத நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.2.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், கடந்த ஐபிஎல் ஏலத்தின்போது, ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.12.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த தொடரை விட தற்போது ஸ்மித் ரூ.10.3 கோடி குறைவாக எடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் கிளார்க் கூறுகையில், டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர் ஸ்டீவ் ஸ்மித். ஆனால் கடந்த ஐபிஎல் அவருக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. ஆனால் இந்தாண்டு அவரை இவ்வளவு குறைவான தொகைக்கு ஏலம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.

Editor's Choice

மிகவும் அருகி வரும் ஃபெர்ரெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குளோனிங் உதவும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடந்த டிசம்பர் 10-ம் தேதி எலிசபெத் ஆன் என்கிற ஃபெர்ரெட் குளோனிங் செய்யப்பட்டு பிறந்ததை 'ஒரு துணிவுமிக்க முன்னேற்றம்' என அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவைத் துறை தெரிவித்தது.

வில்லா என பெயர் சூட்டப்பட்ட விலங்கில் இருந்த மரபணுவை வைத்தே எலிசபெத் ஆன் குளோன் செய்யப்பட்டது.

வில்லா, கருப்பு கால்களைக் கொண்ட ஃபெர்ரெட்டின் ஏழு மூதாதையர்களில் ஒன்று அல்ல. 1981-ம் ஆண்டு ஃபெர்ரெட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், அந்த இனமே ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டதாகாக கருதப்பட்டது.

வில்லா என பெயரிடப்பட்ட விலங்குக்கு சந்ததிகள் இல்லை. வில்லாவின் குளோன், அதன் மரபணு பன்முகத்தன்மையை அதிகரிக்கும், அதோடு ஃபெர்ரெட் இனம் மீள உதவும்.

"இந்த ஆராய்ச்சி தொடக்க நிலையில் இருக்கிறது என்றாலும், வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஓர் உயிரினத்தை குளோன் செய்வது இதுவே முதல் முறை. கருப்பு கால்களைக் கொண்ட ஃபெர்ரெட்டுகளைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, நல்ல பலன் கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது" என அமெரிக்க மீன் மற்றும் வன விலங்கு சேவைத் துறையின் ப்ரேரி பிராந்தியத்தின் இயக்குநர் நூரின் வால்ஷ் கூறினார்.

எலிசபெத் ஆன் வனப் பகுதியில் விடுவிக்கப்படாது. அது பிறந்த கொலராடோ மையத்திலேயே தொடர்ந்து வாழும். எனவே ஆராய்ச்சியாளர்கள் அதை ஆராய்ச்சி செய்ய முடியும்.

இந்த ஃபெர்ரெட் 'வையாஜென் பெட்ஸ் மற்றும் ஈக்வின்' என்கிற விலங்கின குளோனிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதாவது, கரு பரிமாற்றம் மூலம் மற்றொரு ஃபெர்ரெட்டில் செலுத்தப்பட்டு பிறந்தது.

இதே வழிமுறையில் கடந்த கோடை காலத்தில், ஒரு மங்கோலிய காட்டுக் குதிரை குளோன் செய்யப்பட்டது. குர்ட் என்கிற குதிரையின் 40 ஆண்டு கால பழைய மரபணுவை வைத்து, பெர்ஸ்வால்ஸ்கி என்கிற குதிரை குளோன் செய்யப்பட்டது.

கருப்பு கால்களைக் கொண்ட ஃபெர்ரெட் வட அமெரிக்காவில் காணப்படும் ஒரே ஒரு ஃபெர்ரெட் இனம். அது தற்போது அருகிவரும் பாலூட்டிகளாக இருக்கின்றன.

ஃபெர்ரெட்டை ஒத்த விலங்கினமான மிங்க்குகளுக்கு மனிதர்களிடமிருந்து கொரோனா தொற்று பரவியதால், அவை பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில், கடந்த சில மாதங்களில் இறந்தன. இந்த தொற்று பரவாமல் இருக்க லட்சக்கணக்கிலான மிங்க்குகள் ஐரோப்பா கண்டம் முழுவதிலும் அழிக்கப்பட்டன.

ஃபெர்ரெட்டுகளுக்கு கொரோனா பரவாமல் இருக்க, கடந்த கோடை காலத்திலேயே 120-க்கும் மேற்பட்டவைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

தொழில்நுட்பத்தில் புதுப்புது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன் தாக்கம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களிலும் பிரதிபலிப்பதை பார்க்க முடிகிறது.

மின்சார பல்புகளை எடுத்துக்கொண்டால் துவக்கத்தில், குண்டு பல்புகளாக இருந்தன, அதன்பின், டியூப் லைட், எல்.இ.டி., என மாற்றம் கண்டு, தற்போது, எமர்ஜென்சி எல்.இ.டி., என்ற கட்டத்துக்கு வந்திருக்கிறது. ‘ஓரியன்ட் எலெக்ட்ரிக்’ நிறுவனம், அண்மையில் எமர்ஜென்சி எல்.இ.டி., பல்புகளை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், தொடர்ந்து எரியும் என்பதுதான் இதன் சிறப்பு. இந்த பல்பில் பேட்டரி மற்றும் சார்ஜர் உள்ளது. அதிகபட்சம், நான்கு மணிநேரம் வரை இந்த பல்பை, மின்சாரம் இன்றி பயன்படுத்த முடியும். மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், ஒரு நொடிகூட நம்மால் இருட்டைப் பார்க்க முடியாது. அவ்வளவு விரைவாக இந்த பல்பு செயல்படும். தற்போது நாம் பயன்படுத்தும் அனைத்து ஹோல்டர்களிலும் இந்த பல்பை பொருத்த முடியும். மின்சாரம் மீண்டும் வந்ததும், பல்பு தானாகவே சார்ஜ் ஏற்றிக் கொள்ளும்.

‘இன்வெர்ட்டர்’ வாங்க கிட்டத்தட்ட, 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்வதற்கு பதிலாக, இத்தகைய பல்பை வாங்கி, மின் தடையை எளிதாக சமாளிக்கலாம். இனி ‘இன்வெர்ட்டர்’ தேவை குறைந்துவிடும்.

சாதாரண, எல்.இ.டி., பல்பை விட, 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை இவற்றின் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்த பல்புகளை மற்ற பல்புகளுடன் ஒப்பிடக் கூடாது. ‘இன்வெர்ட்டர்’ வாங்குவதுடன் ஒப்பீடு செய்வதே சரியாக இருக்கும். இந்த பல்புகளை தாராளமாக, 3 முதல், 5 ஆண்டுகள் வரை கூட பயன்படுத்த முடியும்.

Editor's Choice

செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவர்களின் பயணத்தின் போது பொருத்தமான புதுமையான உணவுகளையும், அவற்றுக்கான தயாரிப்பு முறைகளையும் கண்டுபிடித்து கூறினால் 5லட்சம்  டாலர் பரிசு வழங்குவதாக நாசா அறிவித்துள்ளது.வரும் மே மாதம் 28 வரை பெயரை பதிவு செய்து ஜூலை 30 க்குள் தங்களது கண்டுபிடிப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டும் என நாசா தெரிவித்துள்ளது.ஆனால் அமெரிக்கர்களுக்கு மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதர நாடுளை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம், ஆனால் பரிசு கிடையாது.

Editor's Choice

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கினைக் கைவிட, கோகோ கோலா தீர்மானித்து விட்டது. அடுத்து, முழுக்க முழுக்க, காகிதத்தாலேயே தயாரிக்கப்பட்ட பாட்டிலை தனது பானங்களுக்கு பயன்படுத்த, கோகோ கோலா ஆராய்ந்து வருகிறது.

இதற்கென, நெதர்லாந்திலுள்ள 'பேப்பர் பாட்டில் கம்பெனி'யுடன், கோகோ கோலா கைகோர்த்துள்ளது. 'பேபாகோ. என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம், ஒரு புதிய காகித பாட்டிலை தயாரித்துள்ளது.

இதன் உட்புறத்திலுள்ள காகிதம், கோலாவின் சர்க்கரை, சோடா, ஆக்சிஜன் போன்றவை, கெட்டுவிடாமலும், ஓட்டை விழாமலும் சமாளிக்கும் திறன் கொண்டது. சோடா வாயுவின் அழுத்தத்தை தாங்கும் திறனும் பேபாகோ பாட்டிலுக்கு உண்டு. எனவே, நெதர்லாந்தில், தாவரச் சாற்றில் தயாராகும், 'அடேஸ்' என்ற பானத்தை, காகித பாட்டிலில் விற்பனை வெள்ளோட்டம் விட கோகோ கோலா தீர்மானித்துள்ளது.

இதில் வெற்றி கிடைத்தால், அடுத்த சில ஆண்டுகளில் கோகோ கோலா பானமும் காகித பாட்டில்களில் அடைத்தே விற்கப்படும் என்று தெரிகிறது.

பக்கம் 30 / 74