செயற்கை நுண்ணறிவு (Artificial Intellligence) எனும் துறையின் கீழ், மனிதனின் பல்வேறு வேலைகளை எளிதாக்கி உற்பத்தியையும் செயலாக்கங்களையும் மேற்கொள்வது தான் இந்தத் துறையின் அடிப்படை நோக்கம், இன்னும் சில காலங்களில் அனைத்து துறைகளிலும் இன்றியமையாத அங்கமாகவுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் படித்தவர்களுக்கு, உலகெங்கிலும் சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருக்கிறது. ஆனாலும், இன்றைய சூழலில் இந்த தொழில்நுட்பத்தை எங்கே படிப்பது, வேலை வாய்ப்புகள் எப்படி கிடைக்கும் என்ற கேள்விகளும் குழப்பங்களும் மாணவர்களுக்கும், பெற்றோர்க்கும் இருக்கும். அவர்களுக்காக, இதோ முக்கிய தகவல்கள்
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
பல ஆண்டுகளுக்கு முன் மனித உடல் உழைப்பை எந்திரங்கள் குறைத்து எளிமையாக்கியது போல, மனிதன் சிந்தித்து செய்யும் வேலைகளை எளிமையாக்கி, உற்பத்தியையும், சேவைகளையும் கையாளும் பணிகளை செய்வது தான் செயற்கை நுண்ணறிவு. ஏறக்குறைய அனைத்து தொழிற்சாலைகளிலும் இன்று பணியாளார்களை விட மிகப் பெரிய ரோபோ இயந்திரங்கள் அழகாக உற்பத்தி பணிகள் செய்வதைப் பார்க்கிறோம். மனிதனின் உதவியின்றி சூழல் அறிந்து செயல்படும் ரோபோக்களும், தொழில்நுட்பங்களும் பெருகிவிட்டன. மருத்துவமனைகளில் ரோபோடிக் சர்ஜரி என்ற பெயரில் ரோபோக்களை வைத்து சிக்கலான சிகிச்சைகளை செய்கின்றனர். ராக்கெட் தளங்கள், ஐடி நிறுவனங்கள் என ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் ரோபோக்களின் பங்களிப்பு இன்றியமையாததாக மாறியுள்ளது. வாகனங்களிலும் தற்போது தானியங்கி ரோபோ தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பல மேலை நாடுகளில் வீட்டு உபயோகங்களுக்குக் கூட மனிதனைப் போல சிந்திக்கும் ரோபோக்களை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். செல்போன்கள் தயாரிப்பு, தானியங்கி இயந்திரங்கள், வாகனங்களில் வழிகாட்டும் தொழில்நுட்பங்கள், கம்ப்யூட்டர்கள், நெட்வொர்க், தகவல் தொடர்பு என…இனி வருங்காலத்தை ஆளப்போகும் அத்தனை விஷயங்களிலும், துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமின்றி எதுவும் நடக்காது. மனித உத்தரவுக்கு கட்டுப்பட்டு வேலைகளை முடிக்கும் செயற்கை நுண்ணறிவு மட்டுமின்றி, மனிதன் யோசிக்காத விஷயங்களையும் உணர்ந்து செயல்பட்டு முடிவுகளை அளிக்கும் தொழில்நுட்பங்கள் இந்த செயற்கை நுண்ணறிவுக்குள் அடங்கும்.
என்னென்ன படிப்புகள் உள்ளன?
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் ஆர்வமிருந்தால் உங்களுக்கு ஏற்ற துறை இது தான். இந்தத் துறையில் மேம்பட்ட பதவிகளை வகித்து முன்னேற வேண்டுமென்றால், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் உள்பட ஏதேனும் பொயியியல் படிப்பை முடித்த பின்னர், முதுகலை பொறியியல் படிப்பாக ‘ரோபாடிக்ஸ் - ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ படிப்பைப் படிக்கலாம். சில பல்கலைக்கழகங்களில் M.Tech மற்றும் MS படிப்புகள் உள்ளன. இளநிலை பொறியியல் படிப்பு முடித்து, மீண்டும் நீண்ட காலம் படிக்க இயலாது என்பவர்கள், இதே துறையில் பட்டயப் படிப்பை முடிக்கலாம். தனியார் கணினி பயிற்சி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் படிப்புகளை பட்டயப் படிப்பாக வழங்குகின்றன.
ஆனாலும் இளங்கலை பொறியியல் முடித்து ரோபோடிக்ஸ் பட்ட மேற்படிப்பு முடிப்பவர்களுக்கு, நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.
வேலைவாய்ப்புகள்
நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) போன்ற அரசு நிறுவனங்கள் தொடங்கி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் வரை ஏராளமான நேரடி வேலைவாய்ப்புகள் உள்ளன. தற்போது பல்வேறு உற்பத்தி தொழிற்சாலைகளிலும் செயற்கை நுண்ணறிவு முக்கிய இடம்பிடிக்கத் தொடங்கியிருப்பதால், அடுத்த ஐந்தாண்டுகள் முதல் பத்தாண்டுகளுக்குள், இந்தத் துறையில் படிப்பு முடிப்போர்க்கு மிகப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.
என்னென்ன பிரிவுகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன?
ரோபோ வடிவமைத்தல்
பல துறைகளில் ரோபோடிக் பயன்பாடுகள் பற்றி ஆராய்ச்சி செய்தல்.
செயற்கை நுண்ணறிவு வடிவமைப்பில், பொறியாளர்களுக்கு உதவுதல்.
ரோபோ வடிவமைப்பில் எலக்ட்ரானிக் கூறுகளை ஆராய்தல்.
ரோபோ தொழில்நுட்பங்களின் குறைகளை சோதித்தல்.
ரோபோ தொழில்நுட்பங்களை நிறுவுதல்.
ரோபோ பாதுகாப்பு அம்சங்களை ஆராய்தல்
செயற்கை நுண்ணறிவு வாடிக்கையாளர்களுக்கு செவை செய்தல்/ பழுது நீக்குதல்
இவை இப்போதைய பணிகள். இன்னும் ஏராளமான பணி வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு – ரோபோடிக்ஸ் படிப்புகளை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள்
ஐஐடி -சென்னை உள்பட அனைத்து மையங்கள்.
பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி, கோவை.
*எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மையம், காஞ்சிபுரம்.
* சர்வதேச தகவல் தொழில்நுட்ப பயிற்சி மையம், ஹைதராபாத்
இதுபோல, ஆந்திராவின் பல பல்கலைக்கழகங்கள், பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப பயிற்சி மையம் உள்பட பல்வேறு மையங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன.