Editor's Choice

தமிழ்ப் புத்தாண்டைப் பொறுத்தவரை தற்போதைய தமிழக அரசின் நிலைப்பாடு சித்திரை- 1. இதை ஏற்றுக்கொள்பவர்கள் பலருண்டு. இதேபோல தை -ஒன்றாம் தேதிதான் தமிழ்ப்புத்தாண்டு என்பது முன்பு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசின் நிலைப்பாடு. இதை ஏற்றுக்கொள்பவர்களும் பலருண்டு. தமிழார்வலர்கள் பெரும்பாலானவர்கள், நீண்டகாலமாக தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லிவருவதும் தை -ஒன்றாம் தேதியைத்தான். தை -1 தமிழ்ப் புத்தாண்டு என்றால், அதற்கு இன்னும் 22 நாள்கள் இருக்கின்றன.

இத்தகைய குழப்பங்களுக்கு இடையில், “உண்மையில் தை ஒன்றாம் தேதி என்பது டிசம்பர் 22 தான்.

தமிழர்களின் புத்தாண்டு அன்றுதான் பிறக்கிறது'' என்று புதிதாக ஒரு விஷயத்தை முன்வைக்கிறார் கோயில் கட்டடக்கலை நிபுணரும், தமிழ் ஆராய்ச்சியாளருமான தென்னன் மெய்யம்மன். ஆண்டு மற்றும் நாள்கள் குறித்து மரபு வழியிலான ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வரும் தென்னன் மெய்ம்மன், மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலைக் கல்லூரியில், கட்டடக்கலைப் பிரிவில் விரிவுரையாளராக இருந்தவர். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இருப்பவர்.

“அதெப்படி? நாம் பயன்படுத்தும் காலண்டர் சொல்லும் செய்தி தவறாக இருக்க முடியும்? பஞ்சாங்கத்தின் அடிப்படையிலான தமிழ் மாதங்களையும், ஆண்டையும்தானே நாம் பயன்படுத்தி வருகிறோம்?” என்று கேட்டால், “காலண்டர் சொல்லும் செய்தி மட்டுமல்ல... காலண்டரே தவறாக உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று அடித்துச் சொல்லும் மெய்யப்பன்,“இந்த நுட்பத்தைப் புரிந்துகொள்ள கொஞ்சம் வானவியல் அறிவு தேவை. இதை நான் மேம்போக்காகச் சொல்லவில்லை. மரபு வழியில், இருபதாண்டுகளுக்கும் மேலாக நானும், என் குழுவினரும் வானவியல் ஆய்வுகளைச் செய்தபிறகே சொல்கிறோம். இதுகுறித்து பெரிய அளவில் யாருக்கும் தெரியாததால் எங்கள் குரலில் இருக்கிற உண்மை பலருக்கும் பிடிபடவில்லை. உண்மை தெரிந்த வானவியல் அறிஞர்கள் பலரும் அமைதியாக இருக்கிறார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அ

இப்படி அறிவிப்பு செய்ய வேண்டும் என்றால், நிலவு சரியான நாள்களில் வரவேண்டும். 360 நாள்கள் பூர்த்தியாக வேண்டும்.
கடந்த நான்கு வருடங்களாக இதுகுறித்து ஆய்வு செய்தோம். 05.01.2014- ல் இருந்து 21.12.2017 வரையான மொத்தம் 1447 நாள்களில் முறையே 353, 356, 354, 355 நாள்களில் ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. தொங்கல் மாதமாக மொத்தம் 29 நாள்களும் உள்ளன. இதனை மையப்படுத்தி நாங்கள் ‘பெருந்தச்சு நிழல் நாள்காட்டி’  என்று ஒரு நாட்காட்டியைத் தயாரித்துள்ளோம்.

வருடத்துக்கு 360 நாள்கள் வரவேண்டிய சூழலில், இப்படி குறைவாக வருவதற்கு ‘நிலவு தடுமாறுதல்’ தான் காரணம். ‘நிலவு தடுமாறுதல்’ என்பது அமாவாசை அன்று மறைந்த நிலவானது, மீண்டும் 15 நாள்களில் வராமல் முன்பே வந்துவிடுவது. கடந்த ஆண்டில் மட்டும்  இப்படி ஐந்து நிலவு தடுமாறியிருக்கிறது. இதனால்தான் வருடத்துக்கு 360 நாள்களுக்குப் பதிலாக குறைவான நாள்கள் வந்திருக்கின்றன. பல ஆண்டுகளாக இப்படித்தான் வருகிறது. இப்படி வரக்கூடாது. இது அனைத்து உயிர்களுக்கும் நல்லதல்ல. இப்படி குறைவாக வருவதை நாம் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் சனிக்கிழமை. நம் மரபில் சனிக்கிழமை என்ற ஒன்றே இல்லை. வெள்ளிக்கிழமைக்கு அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை வந்துவிடும். ஆனால், பல காரணங்களால் சனிக்கிழமை என்ற ஒருநாள் திட்டமிட்டு திணிக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கின்றது" என்று சொன்ன மெய்யம்மன், தொடர்ந்து சொல்லும் செய்திகள், ஆச்சர்யத்தோடு பல்வேறு கேள்விகளையும் எழுப்புபவையாகவே உள்ளன.

''நிலவு சரியாக வராமல், முந்தி வந்தால்... ஆண்டின் நாள்கள் குறையும். இப்படிக் குறையும்போது, மழை சரியாகப் பொழியாது. இயற்கைச் சமநிலை சரியாக இருக்காது. இதுபோன்று பல கேடுகள் உருவாகும். மன்னர்கள் காலத்தில் ஏராளமான நுட்பங்களைப் பயன்படுத்தி பூமியைச் சரிசெய்து ஆண்டு, நாள்களை சரியாகக் கொண்டுவந்தார்கள். தமிழர்களின் அரசு சார்ந்த அத்தனை செயல்பாடுகளும் புத்தாண்டைச் சார்ந்துதான் இருந்துள்ளன. அதற்குப் பெயர்தான், ‘கொற்றம்‘. இதைச் சரியாக ஒழுங்குபடுத்திய மன்னன்தான்  ‘கொற்றவேந்தன்’ என்று அழைக்கப்பட்டான். இதற்கான இலக்கியச் சான்றுகள் ஏராளம் உள்ளன. 

மன்னர்கள், ‘ஆண்டு ஒழுங்கு’ செய்வதற்காக தனிப்படையையே நடத்தியிருக்கிறார்கள். ஆயுதம் தாங்கிய படை அல்ல. கலைஞர்களால், நிபுணர்களால் ஆன படை. ‘உயிர்கள் எழுப்பக் கூடிய ஒலி அலைகளின் கட்டுப்பாட்டில்தான் நிலவு இயங்குகிறது. காதுக்குக் கேட்காத இந்த ஒலியின் மூலமாகத்தான் நிலவு ஒழுங்குபடுத்தப்படுகிறது’ என்று நவீன விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது. ராஜராஜன் காலத்திலும் இந்த ‘நிலவு தடுமாற்றம்‘ ஏற்பட்டுள்ளது. அதனை ஒலி அலைகளின் மூலமாக ஒழுங்குபடுத்தியிருக்கிறான் ராஜராஜன். 

நாள்களை ஒழுங்குபடுத்துவதற்கு பத்துக்கும் மேற்பட்ட உத்திகள் உள்ளன. இதற்கு ‘துப்பு’ என்று பெயர். ஆனால், இந்த உத்திகளை தற்காலத்தில் பயன்படுத்த முடியாது. தஞ்சை பெரிய கோயிலே ராஜராஜன் பயன்படுத்திய துப்புதான். கோயிலின் அசைவின் மூலமாக பூமியை நகர்த்தி ஒழுங்கு செய்திருக்கிறான் ராஜராஜன்.

ஆக, தமிழ்ப்புத்தாண்டு என்பது சித்திரை 1, ஜனவரி மாதத்தில் தற்போதைய காலண்டர் படி பிறக்கும் தை 1 என்பதைத் தாண்டி, நிலவுப் பயணத்தின் அடிப்படையில் 360 நாள்கள் கடந்த நிலையில் வரும் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று மூன்றாவதாக ஒரு தமிழ்ப்புத்தாண்டு வந்துள்ளளது. மெய்ம்மன் சொல்வது அத்தனையையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை... இதென்னடா புதுக்குழப்பம் என்று கடந்து போகவும் முடியவில்லை. வானிலை மற்றும் தமிழ் ஆராய்ச்சியாளர்கள்தான் பதில் தரவேண்டும்.

 

Editor's Choice

உலகின் அனைத்து பகுதிகளிலும், அங்கு வாழும் மக்கள் அங்கிருக்கும் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும்.  உங்கள் சொந்த ஊரில் வசிக்க  உடலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 

விந்தையான நிபந்தனை கொண்ட அந்த கிராமத்தின் பெயர்  'வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ்' (Villa las estrellas ). இந்த கிராமம் அண்டார்டிகா கண்டத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் பெரிய அளவில் வசதிகள் இல்லை என்றாலும், கடைகள், வங்கிகள், பள்ளிகள், சிறிய தபால் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. குழந்தைகள் பள்ளிகளில் அடிப்படைக் கல்வியைப் பெறுகிறார்கள். ஆனால் மருத்துவமனைகளில்  அடிப்ப்டை சிகிச்சை மட்டுமே கிடைக்கும். நவீன, மேம்பட்ட சிகிச்சை கிடைக்க வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் கிராமத்திலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். 

வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் என்பது அண்டார்டிகாவில் உள்ள விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அல்லது சிலி விமானப்படை மற்றும் இராணுவ துருப்புக்கள் வாழும் பகுதி. விஞ்ஞானிகள் மற்றூம் வீரர்கள்  தனது குடும்பத்தினரையும் இங்கு அழைத்து வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், இங்கு  வாழும் மக்கள் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதிலும்  எந்த அவசரநிலையும் ஏற்படக் கூடாது என்பதிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

குடும்பத்துடன் இங்கு தங்குபவர்கள்  குறிப்பாக இராணுவத்தில் உள்ளவர்களின்  மனைவி கர்ப்பமாக ஆக கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.  ஏனெனில் மருத்துவ வசதி இல்லாததால் எந்தவொரு பெரிய பிரச்சினையும் ஏற்படுவதை தவிர்க்கவே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

அப்பகுதியில் உள்ள மக்கள் அப்பெண்டிக்ஸ் பிரச்சனை, குடல் வால் அழற்சி என்னும்  அப்பெண்டிக்ஸ் (appendix ) வலி ஏற்பட்டால், அவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடக்காமல் அவதிப்படுவர்கள் என்பதால், குடல் வால் தேவையில்லாத பகுதி என அறிவிக்கப்பட்டு, அதை நீக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகாவில் உள்ள இந்த கிராமம் அடர்த்தியான மக்கள்தொகை கொண்டது.  ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ள இந்த பகுதிக்கு செல்ல ராஃப்டிங் படகுகளைப் பயன்படுத்த வேண்டும். வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் பகுதியில் பொது போக்குவரத்து வசதிகள் இல்லை. இங்குள்ள வெப்பநிலை உறைநிலைக்கு கீழே என்ற அளவில் இருந்தாலும், அண்டார்டிகாவில் இது மிகவும் சூடான பகுதியாக கருதப்படுகிறது.

Editor's Choice

மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில்  சித்திரை முதல் தேதி ( ஏப்.,14), ஆடிப்பெருக்கு (ஆக.,3) மற்றும் தைப்பூசம் (2022 ஜன.,18) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்தால், பொது மக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்ய ஏதுவாக இருக்கும். அந்த நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

அந்த விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற பதிவுத்துறை தலைவரின் கோரிக்கையை பரிசீலனை செய்து ஏப்.,14, ஆக.,3 மற்றும் 2022 ஜன.,18 ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ள வேண்டும். அந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது, என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Editor's Choice

கூகுள் வரைபடத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு அது பல சமயம் உதவியாய் இருந்தாலும், சிலபல சமயங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது. இந்த போராட்டத்தின் உச்சகட்டத்தை அனுபவித்துவிட்டார் ஒரு மணமகன். 

இந்தோனேசியாவில் தனது திருமணத்திற்கு சென்ற ஒரு மணமகனுக்கு கூகுள் மேப்ஸ் தவறான வழியை காட்டி, அவரை மாமியார் வீட்டுக்கு அனுப்பியுள்ளது. திருமணம் என்ற நிலையில் தவறான திருமண மண்டபத்திற்கு வந்து வேறு ஒரு பெண்ணை மணக்கவிருந்த விபத்தில் இருந்து தப்பித்தார் மணமகன். 

திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கு மணமகனின் குடும்பத்தினருக்கு வழி தெரியாது. அவர்கள் கூகுள் மேப்ஸை முழுமையாக நம்பியிருந்தனர். திருமண மண்டபத்திற்கு சென்றபோது, மாப்பிள்ளை வீட்டாரை அன்புடன் வரவேற்ற பெண் வீட்டார், விழுந்து விழுந்து உபசாரமும் செய்தனர். 

பிறகு மணமகனின் குடும்பத்தினருடன் பெண் வீட்டை சேர்ந்த சிலர் பேசிக் கொண்டிருக்கும் போது, ஏதோ வித்தியாசம் தெரிந்தது. ​​அவர்கள் பேசுவதற்கும், மாப்பிள்ளை வீட்டைப் பற்றி தங்களுக்கு தெரிந்த தகவல்களுக்கும், மாறியிருப்பதை பெண் வீட்டார் தெரிந்துக் கொண்டனர். 

உடனே பிற உறவினரிடம் சந்தேகத்தை தெரிவிக்க, தீர விசாரித்ததில் மாப்பிள்ளை இடம் மாறியது தெரிந்தது. மிகவும் சங்கடமான சூழ்நிலையை, மேலும் சங்கடமாக்காமல், இதம் பதமாக மாப்பிள்ளை இடம் மாறி வந்த விஷயத்தை தெரிவித்து, மாப்பிள்ளை வீட்டாரை திருப்பி அனுப்பினார்கள். இதில் மற்றுமொரு சுவாரசியம் என்னவென்றால், திருமணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்த மணப்பெண்ணுக்கு இங்கு நடந்த இட மாற்றம், ஆள் மாறி, தான் திருமணம் செய்துக் கொள்ள ஏற்பட்ட சங்கடமான சூழ்நிலை எதுவும் தெரியவில்லை.  

இந்தோனெஷியாவின் மத்திய ஜாவாவின் பாக்கிஸ் மாவட்டத்தில் லோசரி ஹேம்லெட்.  என்ற இடத்திற்கு பதிலாக  ஜெங்க்கோல் ஹேம்லெட் என்ற இடத்தை அடைந்ததால்  குழப்பம் ஏற்பட்டது. இதனால், மாப்பிள்ளை இடம் மாறிவிட்டார்.  

சரியான நேரத்தில் மண்டபத்திற்கு சென்று தனக்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணம் செய்துக் கொண்டார்.

Editor's Choice

சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற, ‘எவர் கிவன்’ கப்பலின் உரிமையாளர் ரூ.7,500 கோடி நஷ்டஈடு வழங்கினால் மட்டுமே கப்பலையும், 25 இந்திய ஊழியர்களையும் விடுக்க முடியும் என்று எகிப்து அரசு அறிவித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த, ‘சோயி கிசென் கய்சா லிமிடெட்,’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது ‘எவர் கிவன்’ சரக்கு கப்பல். 400 அடி நீளமுள்ள பிரமாண்டமான கப்பலான இது, கடந்த மாதம் 23ம் தேதி எகிப்தில் உள்ள முக்கிய சர்வதேச நீர்வழிப் பாதையான சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நின்றது. இதனால், அந்த வழியாக செல்ல வேண்டிய 400க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை உருவானது.  

சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து முடங்கியதால், எகிப்து அரசுக்கு தினமும் ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. கப்பல் தரைதட்டி நின்ற இடத்தில் 18 மீட்டர் ஆழத்திற்கு 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் தோண்டி எடுக்கப்பட்டது. கரையின் மீது கப்பல் மோதி நின்றிருந்ததால், கரையும் உடைக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 29ம் தேதி கப்பல் விடுவிக்கப்பட்டது. இந்த கப்பல் பயணத்துக்கு தயாராகி விட்ட நிலையிலும், எகிப்து அரசு அதை விடுவிக்க மறுத்து விட்டது.

சூயஸ் கால்வாயின் அருகில் உள்ள ‘கிரேட் பிட்டர் ஏரி’யில் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில், பணியாற்றும் 25 இந்திய ஊழியர்களும் அதில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், எவர் கிவன் கப்பலால் ஏற்பட்ட சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட சேதம், வருவாய் இழப்பு போன்றவற்றுக்காக ரூ.7,500 கோடி நஷ்டஈடு வழங்கினால் மட்டுமே கப்பலை விடுவிக்க முடியும் என்று எகிப்து அரசின் சூயஸ் கால்வாய் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், கப்பலின் உரிமையாளரான ஜப்பான் நிறுவனம், அதிர்ச்சி அடைந்துள்ளது. அதே நேரம், ‘நஷ்டஈடு கோரி எங்கள் நிறுவனத்துக்கு எகிப்து அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை,’ என்று சோயி நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Editor's Choice

வருகிற 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என்பதால், ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் என்.இ.எப்.டி முறையிலான பண பரிவர்த்தனை தடையின்றி செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனை மட்டுமே ஆர்டிஜிஎஸ் முறையில் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்கம் 46 / 90