Editor's Choice

உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற போட்டிகளில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியும் ஒன்று. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருவாய் கோடிக்கணக்கில் பணமழை கொட்டுகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததாலும், கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகவும் 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக மகுடம் சூடியது.
 
14-வது ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா அண்மையில் வெளியிட்டார். இதன்படி 8 அணிகள் இடையிலான ஐ.பி.எல். திருவிழா அடுத்த மாதம் 9-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.
 
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை கேப்டன் டோனி அறிமுகம் செய்தார். சென்னை அணிக்கான டுவிட்டர் பக்கத்தில், 'தல தரிசனம்' என்ற பெயரில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், டோனி தனக்கான மஞ்சள் நிற ஜெர்சியை அறிமுகம் செய்தார். புதிய டிசைனுடன் இருக்கக்கூடிய ஜெர்சியை பார்த்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு விசில் போடு என டோனி மகிழும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Editor's Choice

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற யஷாஸ்வினி தேஸ்வால் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை ரைபிள் போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகின்றன.  இதில், ஆடவர் பிரிவு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இன்று நடந்த போட்டியில் பங்கேற்று திவ்யான்ஷ் சிங் பன்வார் என்பவர் வெண்கல பதக்கம் வென்று பதக்க கணக்கை துவக்கினார்.
 
இன்றைய ஆட்டத்தில் மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் யஷாஸ்வினி தேஸ்வால் தங்க பதக்கம் வென்றுள்ளார்.  அவர் மொத்தம் 238.8 புள்ளிகளை பெற்று இந்த பிரிவில் முன்னிலை பெற்றார்.
 
இதேபோன்று, அவருக்கு அடுத்த இடத்தில் மற்றொரு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பேக்கர் 236.7 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
Editor's Choice

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் சில நாட்களில் நடைபெறவிருக்கிறது. அதற்கான கருப்பாடல் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

விவோ ஐ.பி.எல் 2021 போட்டித் தொடருக்கான பாடலை பலரும் பகிர்ந்து வருவதால் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. #VIVOIPL 2021 என்ற ஹேஷ்டேகும் வைரலாகிறது.

இந்த வீடியோவை பார்த்து ரசிக்கலாம், பகிரலாம், அத்துடன் இல்லாமல், ஐ.பி.எல் போட்டிகளையும் கண்டு களிக்கலாம்.

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் 2021 ஏப்ரல் 9 முதல் மே 30 வரை இந்தியாவில் ஆறு வெவ்வேறு இடங்களில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2020 என இரண்டு சீசன்களையும் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

தூக்கம் தொடர்பான தகவல்களை விவாதிக்கவும், தூக்கத்தைப் பற்றிய தகவல்களை பரப்பவும், பல்வேறு சேவைகளை ஒன்றிணைப்பதற்குமான குறியீடாக ஆண்டில் ஒரு நாள் உலக உறக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. 

உலக தூக்க நாள் (World Sleep Day) ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. எனவே, ஆண்டுதோறும் உலக உறக்க தினம் அனுசரிக்கப்படும் தேதி மாறுபடும்.  தூக்க மருத்துவத்துக்கான உலக அமைப்பினால் 2008 ஆம் ஆண்டு முதல் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான, சிறந்த தூக்கத்தின் பயன்களைக் கொண்டாடுவதும், தூக்கப் பிரச்சினைகள், மற்றும் அதற்கான மருத்துவம், கல்வி, சமூக நோக்கு ஆகியவற்றை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதும், தூக்கக் கோளாறுகளின் தடுப்பு மற்றும் அவற்றின் மேலாண்மையை ஊக்குவிப்பதும் இந்த நாளை அனுசரிப்பதற்கான நோக்கமாகும்.

உலக தூக்க நாள் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறுகிறது. முதலாவது தூக்க நாள் 2008 மார்ச் 14 அன்று கொண்டாடப்பட்டது.  தூக்கம் தொடர்புடைய விவாதங்கள், மற்றும் கல்விக் கண்காட்சிகள் ஆகியவை இந்த நாளான்று ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டு 14 வது ஆண்டாக உலக தூக்க தினம். இந்த ஆண்டிற்கான கருப்பொருள், 'வழக்கமான தூக்கம், ஆரோக்கியமான எதிர்காலம்' என்பதாகும். தூக்கத்தின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தூக்கம் பல உடலியல் அமைப்புகளுடன் தொடர்புடையது. தூக்கத்தின் தரமானது, நினைவக ஒருங்கிணைப்பு, வீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், ஹார்மோன் ஒழுங்குமுறை, இருதய ஒழுங்குமுறை மற்றும் பல முக்கியமான செயல்பாடுகளை நிர்ணயிக்கிறது.

போதிய தூக்கம் இன்மையும், தூங்கினாலும், அது தரமான உறக்கமாக இல்லாவிட்டாலும், அது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  தூக்கம் குறைவாக இருந்தால் அது, அறிவாற்றல் மற்றும் நிர்வாக செயல்பாட்டில் குறைபாடுகளை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பபட்டுள்ளது.
மோசமான தூக்கம் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

 
 
Editor's Choice

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுக போட்டியில் இந்தியாவின் குர்னால் பாண்ட்யா 58 ரன், பிரசித் கிருஷ்ணா (4 விக்கெட்) வெற்றிக்கு கைகொடுத்தனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் நடந்தது. இந்திய அணியில் குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா அறிமுகமாகினர். 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது ரோகித் 28 ரன்னில் அவுட்டானார். பொறுப்பாக ஆடிய மற்றொரு துவக்க வீரர் தவான், அடில் ரஷித் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய கேப்டன் விராத் கோஹ்லியும் அரைசதமடித்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த போது கோஹ்லி (56) அவுட்டானார். ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் ஆட்டத்தை இழந்தார். ஷிகர் தவான் 98 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஹர்திக் பாண்ட்யா ஒரு ரன்னில் அவுட்டானார். பின் இணைந்த லோகேஷ் ராகுல், குர்னால் பாண்ட்யா அரைசதம் கடந்தனர்.

இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்தது. ராகுல் 62 ரன், குர்னால் 58 ரன், அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 3, மார்க் உட் 2 விக்கெட் கைப்பற்றினர்.

கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ் 94 ரன், ஜேசன் ராய் 46 ரன் எடுத்தனர். ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும், கேப்டன் மார்கன் 22 ரன்னிலும், பட்லர் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 42.1 ஓவரில் 251 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் கைப்பற்றினார். இந்திய அணி 1-0 என, முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி வரும் மார்ச் 26ல் புனேயில் நடக்கிறது.

Editor's Choice
24-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வருகிறது.
 
பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் தமிழகத்தின் எஸ்.தனலட்சுமி, முன்னணி வீராங்கனையான அசாமை சேர்ந்த ஹிமா தாஸ்சை பின்னுக்கு தள்ளி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அத்துடன் இந்த போட்டியில் தனலட்சுமி புதிய சாதனையும் படைத்தார். இதற்கு முன்பு 1998-ம் ஆண்டில் சென்னையில் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியில் முன்னாள் பிரபல வீராங்கனை பி.டி.உஷா 23.30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தனலட்சுமி நேற்று முறியடித்தார்.  100 மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி, ஒடிசாவின் டுட்டீ சந்தை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

பக்கம் 56 / 90