- தொழில்நுட்பம்
- Read Time: 1 min
- படிப்புகள்: 285
ஃபேஸ்புக்கின் பதிவுகளை மதிப்பிடும் மதிப்பீட்டாளர் (Moderator) முதன்முறையாக அயர்லாந்து நாடாளுமன்ற குழுவிடம் தனது வேலையால் ஏற்படும் மன அழுத்தம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளளார்.
இசெபெல்லா பிளங்கெட், ஃபேஸ்புக் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மதிப்பீட்டாளராகப் பணிபுரிகிறார்.
என்ன காட்சிகளைப் பார்த்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் தனது நண்பர்களிடத்திலோ, வீட்டில் உள்ளவர்களிடமோ அவர் பேசக்கூடாது. ஏனெனில் வேலைக்குச் சேரும்போதே அதற்கான ஒப்பந்தத்தில் நிறுவனம் கையெழுத்துப் பெற்றிருக்கிறது.
அப்படியிருந்தும் அவர் வெளிப்படையாகப் பேச வந்திருக்கிறார். அந்தத் துணிச்சல் குறித்து தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கான அயர்லாந்து நாடாளுமன்றக் குழு பாராட்டியிருக்கிறது.
"அலுவலகத்துக்குச் சென்றோம், வீட்டுக்கு வந்தோம், அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருந்தோம் என்று இந்த வேலையில் இருக்க முடியாது. இது சாதாரண வேலையைப் போன்றதல்ல" என்கிறார் இசெபெல்லா.
இசெபெல்லா ஒரு நாளைக்கு சுமார் 100 "டிக்கெட்டுகளை" பரிசீலிக்க வேண்டும். அவை காணொளியாகவோ, படங்களாகவோ, எழுத்துகளாகவோ இருக்கலாம். பெரும்பாலும் அவை வன்முறைக் காட்சிகள், தற்கொலைகள், சுரண்டல்கள், வசவுகள் போன்றவையாக இருக்கும் என்கிறார் அவர்.
அயர்லாந்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்ததாரரான கோவேலன் என்ற நிறுவனத்தில் இசெபெல்லா பணியாற்றுகிறார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தில் நேரடியாக வேலை செய்யும் பிறரைப் போல தமக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி இல்லை என்கிறார் இசெபெல்லா.
அதனால் அதிக கொடூரமான காட்சிகளையும் பதிவுகளை அலுவலகத்தில் இருந்தபடி தாம் காண வேண்டியிருப்பதாகவும் இசெபெல்லா கூறுகி்றார்.
வீட்டில் இருந்து வேலை செய்வோருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கொடூர வன்முறை, குழந்தைகள் தொடர்பானவை, தற்கொலைகள் போன்ற பதிவுகளைப் பரிசீலிக்கும் பணி தரப்படாது.
வீட்டில் வேலை செய்ய வாய்ப்பிருந்தும், அலுவலகத்துக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டதால், மனஅழுத்தம் அதிகமாகி அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருப்பதாக இசெபெல்லா கூறுகிறார்.
மனநல உதவிகள் 24 மணி நேரமும் இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்தாலும் தமக்கு நல்வாழ்வு குறித்து ஆலோசனை வழங்குவோர் தகுதிபெற்ற மனநல நிபுணர்கள் இல்லை என்கிறார் இசெபெல்லா.
ஒப்பந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு வாரத்துக்கு ஒன்றரை மணி நேரம் நல்வாழ்வுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பயிற்சியாளரிடம் பேசுவது. காலாற நடப்பது போன்றவற்றுக்கு அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
"இது போதாது. வேலையின்போது பார்க்கும் கொடூரக் காட்சிகள் என் கனவுகளில் வருகின்றன. நினைவில் தங்குகின்றன. அது கொடூரமானது." என்கிறார் இசெபெல்லா.
"காணொளிகளிலும் படங்களிலும் அடுத்து என்ன வரப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் முழுமையாக அனைத்தையும் பார்த்தாக வேண்டும். ஏனெனில் எங்காவது விதிமீறல் இருக்கலாம்."
சில ஃபேஸ்புக் மதிப்பீட்டாளர்கள், PTSD எனப்படும் பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் தொடர்பான பொறுப்புத்துறப்புப் பத்திரத்தில் கையெழுத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலையின்போது பார்க்கும் காட்சிகளால் மனநலம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பதிவுகளைப் பரிசீலிக்க மனிதர்களுடன் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது ஃபேஸ்புக். வருங்காலத்தில் மனிதர்களைக் குறைத்துவிட்டு முற்றிலுமாக செயற்கை நுண்ணறிவை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ஃபேஸ்புக் நம்புகிறது.
ஆனால் இது ஃபேஸ்புக்கின் "அதீத கற்பனை" என்கிறார் இசெபெல்லா. தொழில்நுட்பம் இன்னும் அதற்கு அருகில் கூட வரவில்லை என்கிறார் அவர்.
ரகசியம் காக்கும் ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டு ஊழியர்கள் மிரட்டப்படுவதாகவும், அவர்கள் தங்களது வேலை போய் விடும் என அஞ்சுவதாகவும் நாடாளுமன்ற குழுவிடம் இசெபெல்லா கூறினார்.
ஃபேஸ்புக் ஊழியர்களுக்கான தளத்தில் வெளியே வந்து பேசும் சில ஊழியர்களின் பதிவுகள் அகற்றப்பட்டிருப்பதை இசெபெல்லா சுட்டிக்காட்டுகிறார்.
"தாங்கள் நடத்தப்படும் விதத்தையும் உள்ளே என்ன நடக்கிறது என்பதையும் ஊழியர்கள் பதிவிட்டிருந்தனர்" என்று நாடாளுமன்றக் குழுவிடம் இசெபெல்லா கூறினார். "ஊழியர்களின் கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டு நீக்கப்பட்டிருக்கின்றன. சில கணக்குகள் முடக்கப்படுகின்றன"
தன்னுடைய அனுபவமே தன்னை நாடாளுமன்ற குழு முன் சாட்சியம் அளிக்கத் தூண்டியதாகக் கூறும் இசெபெல்லா, "எனக்கு இதைச் செய்தாக வேண்டும் என்று தோன்றியது," என்கிறார்.
"ஊழியர்களுக்கு பல பொறுப்புகள் இருக்கின்றன. அவர்கள் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. அப்படி அஞ்சிக் கொண்டிருக்கும் ஊழியர்களுக்காக நான் பேச வேண்டியிருக்கிறது," என்கிறார் இசெபெல்லா.


















